இஸ்ரேல் – ஈரான் போர் பதட்டம் காரணமாக, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கப்பலில் 77 கண்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் 12 நாட்களாக சிக்கி தத்தளித்து வருகிறது. முட்டைகளை அனுப்பி வைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எந்த கப்பலும் செல்லவில்லை. கடந்த பிப்ரவரி 28 ந் தேதி நாமக்கல்லில் இருந்து 77 ஏசி கண்டெய்னர்களில் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் அரபு நாடுகளுக்கு செல்லும் வழியில் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது.
இதனால் ஏற்றுமதியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள முட்டையில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி அச்சிடப்பட்டு உள்ளது. இதனால் குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு மேல் அந்த முட்டைகளை விற்பனை செய்ய முடியாது.
எனவே மத்திய வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், சம்மந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளுடன் பேசி நடுக்கடலில் நிற்கும் முட்டைகளை உரிய நாட்டிற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.




