Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் மாதர் சங்கத்தினர் கள ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் கள ஆய்வு மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக மாதர் சங்கத்தினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக மாதர் சங்கத்தினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளது:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு முடிவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வில் புற, உள் நோயாளிகள், அவர்களோடு உடன் இருப்பவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைத்துப் பகுதியினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.

பொதுவாக பெரும்பாலான அரசு மருத்துவமனை வளாகங்கள் சுகாதாரமற்று இருப்பதாக பெரும்பகுதியினர் தெரிவிக் கின்றனர். ஒரு நோய்க்கு மருத்துவம் பார்க்க வந்தால் இன்னொரு நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கழிப்பறை மிகவும் சுகாதாரமற்று உள்ளது. அங்கு தண்ணீர் வசதிகூட பல மருத்துவமனைகளில் இருப்பதில்லை. இதேபோல, குடிநீரையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையே உள்ளது. பல மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாக இருப்பதில்லை. இதனால், வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலையே உள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இதானல், நோயாளிகள் மருத்துவரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. செவியலியர் பற்றாக்குறையால் நோயளிகளை சரியான நேரத்திற்கு மருந்து, மாத்திரைகள் கொடுப்பதற்கோ, ஊசி போடுவதற்கோ சிரமமாக உள்ளது. இதுபோல, இதரப் பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லாததால் நோயாளிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இருப்பதில்லை. இதனால், சுலபமான சிகிக்கையில் குணமடைபவர்கள்கூட நீண்ட தொலைவில் உள்ள புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் மையமாகவே தாலுகா மருத்துவமனைகள் உள்ளன.

புதுக்கோட்டை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்

இப்படி நோயாளிகளின் நிலை ஒருபுறம் இருந்தாலும், மருத்துவர்களின் நிலையும் மோசமாகவே உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஒருவரே இரண்டு மருத்துவர்களின் வேலையை சேர்த்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள பல ஆரம்ப சுதார நிலையங்களுக்கு போதிய நேரத்தில் பேருந்து வசதி இருப்பதில்லை. இருந்தாலும் மருத்துவமனைகளுக்கு அருகில் பேருந்து நிறுத்தம் பல இடங்களில் இல்லை. பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் பேருந்து வழித்தடத்தைத் தாண்டி உள்புறமாக தொலைவில் உள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்துசெல்வதில் நோயாளிகளும் பணியாளர்களுக்கும் சிரமத்தை சந்திக்கின்றனர். பல ஆரம்ப சுhகாதார நிலையங்களில் இரவு நேரக் காவலர்கள் இல்லாததால் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் அச்சத்துடனேயே தங்கவேண்டிய நிலை உள்ளது.

இதையும் தாண்டி சில மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாக நோயாளிளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளர். நாங்கள் நடத்திய ஆய்வின்போது சேகரித்த தகவல்களை மாவட்ட ஆட்சியருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் விரைவில் அறிக்கையாக அனுப்பி வைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top