Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

இந்தியாவில் 9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிப்பு

சென்னை

சுகம் மருத்துவமனை

இந்தியாவில் சுமார் 9 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருவொற்றியூர் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவர் நிபுணர் டாக்டர் .ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் டி. சுரேஷ் குமார் விளக்கமாக எடுத்துரைத்தார்.
சர்க்கரை நோய் சிகிச்சையில் இன்சுலினின் முக்கியத்துவம் குறித்து  சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. விஜயகுமார் விரிவாக விளக்கினார்
பின்னர்  செய்தியாளர்களிடம் டாக்டர் விஜயகுமார் கூறியது,
இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 9 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது.
இதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், சீரற்ற உணவு பழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்டவை கள் காரணிகளாக உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப் பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும் எனில் உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும்.
மேலும் உணவு பழக்கங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடும் அளவிற்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட வேண்டும். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியிலும் விரல்விட்டு எண்ணி விடக்கூடிய அளவில் தான் இருந்தது .
ஆனால் தற்போது வேகமாக இந்நோய் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் சர்க்கரை நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்வதில் மிகுந்த தயக்கம் காட்டி வருகின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும். இன்சுலின் எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
இன்சுலின் குறித்து போதிய விழிப்புணர்வு நோயாளிக ளிடமும், மருத்துவர்களிடமும் இல்லை. இன்சுலினை பரிந்துரைக்கும் மருத்துவர்களை பெரும்பாலான நோயாளிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுதானியங்கள், பருப்பு பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை அதிகமாகவும்,  அரிசி , மாவுச்சத்து உள்ளிட்ட தானியங்களை குறைவாகவும் உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
 மேலும் இனிப்பு அதிகம் உள்ள மா, பலா,சப்போட்டா சீதா, வாழை உள்ளிட்ட பழ வகைகளை தவிர்த்து நார்ச்சத்து உள்ள கொய்யா உள்ளிட்ட  பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
 பொதுவாகவே சர்க்கரை  நோய் குறித்து சமூக ஊடகங்களில் தவறான,  உண்மைக்கு மாறான பல பரிந்துரைகள் பரப்பப் பட்டு வருகின்றன.  இவற்றையெல்லாம் பொதுமக்கள்  நம்பி விடாமல் உரிய மருத்துவர்களிடம் விளக்கமாக நோய் குறித்து அறிந்து கொண்டு  முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் விஜயகுமார்.
 இந்நிகழ்ச்சியில் சுகம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சத்யகுமார், மருத்துவ சங்க செயலாளர் டாக்டர்  பி.நெல்லையப்பர், பொருளாளர் டாக்டர் மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top