Close
செப்டம்பர் 20, 2024 5:46 காலை

கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கம் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடும்ப அட்டையில் என்பிஎச்எம் என்ற குறியீடு உள்ள அட்டையை பிஎச்எச் -ஆக மாற்ற வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் பிரதான் மந்திரி வீடு வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியத் தலைவர் வி.கலைச்செல்வி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றியச் செயலாளர் பி.சோபனா, பொருளாளர் கே.நதியா, துணைச் செயலாளர் எஸ்.கோமதி, துணைத் தலைவர் இ.லதா உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 215 மனுக்களை ஆலங்குடி வட்டாட்சியர் (பொ) ராஜேஸ்வரியிடம் சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top