விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும், கடந்த ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், கணினி உதவியாளர், எம் ஆர்மி செவிலியர், பிபிபி அன்ட் சிஓசி உள்ளிட்ட சிறப்புக்காலமுறை தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும் சட்டப்பூர்வ ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணிநியமனங்கள் 25 சதவீதம் வழங்கப்பட்டு வந்ததை தமிழக அரசு 5 சதவீதமாக குறைத்திருப்பதை கைவிட்டு 25 சதவீதம் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்களின் பணிப்பளுவினை குறைக்க வேண்டும். அலுவலக பணிநேரத்திற்குப் பின்பும் அரசு விடுமுறை தினங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை முற்றாக கைவிட வேண்டும்.
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணமில்லா சிகிச்சையினை உறுதிபடுத்த வேண்டும்.
மருத்துவத்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரளூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் புற ஆதார முகமை மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதிய
நடைமுறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும், முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 24- மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார், போராட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.
போராட்டத்தில் டிஎன்ஆர்ஓ ஏ சங்க மாவட்ட செயலாளர் கே.முருகன்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்க மாவட்ட செயலாளர் ஜெ.ஜெய்சங்கர், தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.அஜிஸ், தமிழ்நாடு கண் மருத்துவ உதவியாளர் சங்க மாநில பொருளாளர் கே.அன்பழகன், தமிழ்நாடு ஓவர்சீஸ் சங்க பொதுச்செயலாளர் வி.நடராஜன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர், போராட்டம் திங்கள்கிழமை காலை 10 மணி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.