நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கடந்த 5 நாட்களாக கிடு கிடுவென சரிவடைந்ததுள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 3.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டயங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 1ம் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) மண்டல கூட்டத்தில் முடிவு செய்தபடி, தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த, பிப். 27ம் தேதி, ஒரு முட்டையின் விலை ரூ. 4.90 ஆக இருந்தது. 28ம் தேதி 30 பைசா சரிவடைந்து ரூ. 4.60 ஆனது. மார்ச் 1ம் தேதி மீண்டும் 40 பைசா குறைந்து ரூ. 4.20 ஆனது. 2ம் தேதி 20 பைசா குறைக்கப்பட்டு ரூ. 4 ஆனது. இந்த நிலையில் நேற்று மாலை என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 3.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முட்டை விலை தொடர் சரிவாலும் 5 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.10 குறைந்ததாலும் பண்ணையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 105 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 65 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.