சோழவந்தான் :
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மின்சார வாரியம் முறையாக அறிவிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல் திடீரென மின்தடை செய்கிறது. அவ்வாறு ஏற்படும் மின்தடையானது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை வருவதில்லை. இதனால் பணிகளுக்கு செல்பவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் தூக்கமின்றி வீட்டு வாசல்களிலும் வீட்டு மாடிகளிலும் வராண்டா பகுதிகளிலும் உலாவும் அவல நிலை ஏற்படுகிறது.
மின்சார வாரியமும் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிப்பதில்லை. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளின் சட்ட விரோத செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
எதற்காக மின்தடை செய்யப்படுகிறது அவ்வாறு செய்யப்படும் மின்தடை மறுபடியும் எப்போது வரும் என்ற தகவலும் பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை. ஆகையால் பணிகளுக்கு செல்பவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தாய்மார்கள் என அனைவரும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மின்சார வாரியம் தினசரி மின்தடை செய்யப்படும் நேரத்தை பத்திரிகைகள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அல்லது ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் இன்று இந்த நேரங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதற்கு ஏற்றார் போல் பொதுமக்கள் தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்வார்கள. பொதுமக்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி மின்சார வாரியம் அறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்