Close
செப்டம்பர் 20, 2024 7:33 காலை

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரும்பப் பெறப்பட்டது கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

தமிழ்நாடு

கண்டெய்னர்கள் லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப்பெறப்பட்டது

 பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதையடுத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமை யாளர்கள் சங்கம் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திரும்பப் பெறப்பட்டது.

சென்னை,  எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களை சார்ந்து இயங்கி வந்த அனைத்து வகை கண்டெய்னர் லாரிகளும் கூட்டாகச் சேர்ந்த வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள்கிழ மை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங் கினர்.

 இதனையடுத்து மூன்று துறைமுகங்களிலும் கண்டெய்னர் லாரிகள் மூலமாக நடைபெற்று வந்த ஏற்றுமதி,  இறக்குமதி பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. முதற்கட்டப் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படாததாலல் வியாழக்கிழமை நான்காவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

இதனையடுத்து பூக்கடை காவல் துணை ஆணையர் மகேஸ்வரன், தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் வருவது குறித்து பேச்சுவார்த்தை வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

சென்னை துறைமுக தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற  இப்பேச்சுவார்த்தையில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு,  சென்னை சுங்கத்துறை தரகர்கள் சங்கம்,  கப்பல் போக்குவரத்து முகவர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், சென்னை துறைமுக போக்குவரத்து துறை துணை மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் காலவரை யற்ற வேலை நிறுத்தம் உடனடியாக வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

25  % வாடகை உயர்வுக்கு உடன்பாடு எட்டப்பட்டது:

இது தொடர்பாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.எம்.கோபி, எஸ்.ஆர்.ராஜா, கரிகாலன், மனோகரன் உள்ளிட்டோர் கூறியது,

80 சதவீத வாடகை உயர்வு,  சரக்கு பெட்டக நிலையங்களில் நிலவும் கட்டமைப்பு வசதி குறைபாடுகள்,  அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், தேவையற்ற முறையில் வசூலிக்கப்படும் மாமுல் தொகையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சரக்கு பெட்டக நிலையங்களுக்கும் துறைமுகங்களுக்கும் இடையே கண்டெய்னர் லாரிகள் மூலம் ஏற்றி செல்வதற்கு 25 சதவீத வாடகை உயர்வும்,  நேரடியாக துறைமுகங்களில் இருந்து இறக்குமதியாளர்களின் இடங்களுக்கும், ஏற்றுமதியாளர் களின் கிடங்குகளிலிருந்து துறைமுகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் கண்டெய்னர்களுக்கு 10% வாடகை உயர்வும் அளிப்பது என பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

 மேலும் சரக்குப்பெட்டகங்களின் நிலையங்களில் தேவை யற்ற முறையில் வசூலிக்கப்படும் மாமுல் தொகையை லாரி உரிமையாளர்கள் வழங்க வேண்டியது இல்லை,  கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும் எதிர் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதால் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு முதல் கண்டெய்னர் லாரிகள் மீண்டும் ஓடத் தொடங்கும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top