Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

தஞ்சையில் மழையால் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பெங்களுர் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன் தலைமையில் சென்னை தரக்கட்டுப்பாட்டுமைய அதிகாரி  சி.யூனுஸ் , ஒய். போயோ  ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வங்கக் கடல் மற்றும் அதனருகில் உள்ளமத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் 29.1.2023 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவானது. இது 30.1.2023 அன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது.  இக்கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழைநீர் சூழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகலவறிந்ததும்  தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும்  உணவு,உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்டபயிர் சேதங்களை            உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர்  அர.சக்கரபாணி ,தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்  தலைமையில், கூட்டுறவு, உணவுமற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் சு. பிரபாகர், மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் (05.02.2023) அன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

அமைச்சர்கள், அரசுஉயர் அலுவலர்கள் 5.2.2023 அன்று கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ததோடு, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்தநிலையில்,கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் (06.02.2023)  அமைச்சர்கள் சந்தித்து விளக்கிய தோடு, அது தொடர்பான அறிக்கையினையும்  வழங்கினர். அமைச்சர்களின் கருத்துகள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு,பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின் படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறுவகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.4. நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும். பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டபயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அதோடு மட்டுமல்லாமல்,கன மழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும் போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திடஉரிய தளர்வுகளை வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர்  இந்தியப் பிரதமருக்கு சென்ற  05.02.2023 அன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் குறித்து பார்வையிடுவதற்காக மத்திய குழு அலுவலர்கள் 9.2.2023 அன்று  தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து பாபநாசம் வட்டம் அருள்மொழிபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம், ஒரத்தநாடு வட்டம்,  பாப்பநாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம்  மற்றும் பட்டுக்கோட்டை வட்டம் ,அலிவலம், பில்லாங்குழி நேரடி நெல் கொள் முதல் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

விவசாயிகள் மத்திய குழுவினரிடம் 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திடஉரிய தளர்வுகளை வழங்கிடுமாறு     கோரிக்கை வைத்தனர்.  மத்தியகுழுவினரின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் தீர்வு காணப்படும்.

இந்தஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலைமண்டல மேலாளர் உமாமகேஸ்வரி,வேளாண்மை இணை இயக்குனர்  நல்லமுத்துராஜா, ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (விவசாயம்) .கோமதிதங்கம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர் விவசாயசங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top