Close
ஜூன் 15, 2025 4:29 காலை

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் மாதேஸ்வரன் எம்.பி., கோரிக்கை..!

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.

நாமக்கல்:

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம், நாமக்கல் லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் வரை காவிரியின் குறுக்கே கதவணை அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 2 மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயிகளின் பாசனத்திற்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மோகனூரில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும்.

பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே செயல்பட்டுவந்த வெற்றிலை ஆராய்ச்சி மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது வெற்றிலை சாகுபடியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் ப.வேலூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் துவக்கப்பட வேண்டும்.

மேலும் சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக உள்ள காவிரி – திருமணிமுத்தாறு, 132 கி.மீ. தூரம் வரை உள்ள இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தி, டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கொல்லிமலையில் உள்ள மூலிகை வளத்தை மேம்படுத்த அங்கு மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top