Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

சாத்தூரில் (மே 20, 21, 22) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு

தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே. 20, 21, 22 -மூன்று நாள்கள்  நடைபெறுகிறது.

60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா கண்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது மாநில மாநாடு வரும் மே 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சி ஹோட்டல் சாரதாவில் சனிக்கிழமை நடைபெற்றது.

கலைஇலக்கிய பெருமன்றம்
திருச்சியில்  நடந்த செயற்குழுக் கூட்டத்தில் சாத்தூரில்  நடைபெறவுள்ள  மாநில மாநாட்டின் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது

கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளர் ப.பா. ரமணி தலைமை வகித்தார்.

மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா. காமராசு, துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் ஹாமீம் முஸ்தபா, துணைத் தலைவர் கவிஞர் கோ. கலியமூர்த்தி, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் நா. ராமச்சந்திரன், எழுத்தாளர்கள் கண்மணிராசா, நாணற்காடன், சு. பிரபாகரன், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் எல்லை சிவகுமார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. கங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டை வரும் மே 20,21, 22 ஆகிய 3 நாட்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

கலை இலக்கிய பெருமன்றம்

பன்மை பூக்கும் மண்ணில் வன்மம் இல்லா வாழ்வு என்ற முழக்கத்தில் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 350 பேராளர்களைப் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

மூன்று நாள் மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மாநிலசிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரவீந்திரன்.

பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியன், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் பொன்னீலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

கவிஞர் கனிமொழி எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலர் இரா. முத்தரசன், துணைச் செயலர்கள் கே.சுப்பராயன், மு. வீரபாண்டியன், தாமரை ஆசிரியர் சி. மகேந்திரன், பேராசிரியர் வீ. அரசு, சூழலியலாளர் நக்கீரன், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன், திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோரும் உரையாற்றுகின்றனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள கலைக்குழுக்கள் பங்கேற்கும் மக்கள் கலை விழாக்கள் நடைபெறவுள்ளன.

மேலும், தொல்லியல் கண்காட்சி. புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி போன்றவையும் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளையும் முன்வைத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top