Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

புத்தகம் அறிவோம்…சுகி சிவம் வாழ்வியல் சிந்தனைகள்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. சுகிசிவம் சிந்தனைகள்

“சுகி.சிவம் வாழ்வியல் சிந்தனைகள்” ஒரு சுகி.சிவம் “வாசிப்பு” (Reader) நூல்.

சுகி.சிவம் ,பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மீகச் சிந்தனையாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமை. பேச்சையும் எழுத்தையும் ஒருசேரக் கொண்டு செல்பவர். அவருடைய தன்னம்பிக்கை உரைகள், எழுத்துகள் பலரின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறது.

நான் அவ்வப்போது கல்லூரி மாணவர்களிடம் ‘அடுத்து என்ன படிக்கலாம் ‘என்பது பற்றி உரையாற்றும் போது, தமிழ் எடுத்து படித்தால் என்ன பயன் என்பதற்கு உதாரணமாக வைரமுத்துவையும், சுகி.சிவத்தையும் சொல்வதுண்டு. அவர்களிடம் உள்ள தமிழ்ப் பேச்சாற்றல், எழுத்தாற்றல் அவர்களை லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அழைக்கச் சொல்கிறது. நீங்களும் தமிழ் எடுத்துப்படித்து , பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொண்டால் இவர்களைப் போல் வரலாம் என்பேன்.அந்த வகையிலும் பலருக்கு வழிகாட்டுபவர்கள் இவர்கள்.

“சுகி.சிவம் வாழ்வியல் சிந்தனைகள், “அவருடைய நூல்களைப் பற்றிய ஆய்வுத்தொகுப்பு. அவருடைய பொன்விழா நிறைவில் துரை அங்குசாமி என்பவரால் தொகுக்கப்பட்டு கற்பகம் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது.

இந்நூலில் 53 சுகி.சிவம் நூல் வாசிப்பாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் உள்ளது. சுகி.சிவம் அவர்களின் தன்னம்பிக்கை நூல்கள், அது ஏற்படுத்தியுள்ளதாக்கங்கள் பற்றி விரிவாக பலராலும் ஆராயப்பட்டுள்ளது.

“வாழ்வில் செயித்தவர்களைக் காணுங்கள். முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டிருப்பதை அறியலாம். நீங்களும் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம்” என்ற சுகி.சிவத்தின் வார்த்தைகள் பல இடங்களில் எழுத்தாளப்பட்டிருக்கிறது. அதேபோல குடும்பம், ஆன்மீகம், தனிமனித வாழ்க்கை மேன்பாட்டிற்கான கருத்துகளும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

சுகி. சிவத்தின் நூல்களை எல்லாம் வாங்கிப் படிக்க முடியாதவர்கள் இதை ஒன்று வாங்கிப் படித்தால் போதும், அவரின் எல்லா நூல்களின் சாரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
இந்நூலில் உள்ள சில தலைப்புகள்…
சுகி.சிவம் காட்டும் குடும்பம்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
இதிகாசங்களில் வாழ்வியல் சிந்தனைகள்.
மனிதனின் தேடல்.
சுகி.சிவம் உணர்த்தும் மனிதனின் வேண்டா உறவுகள்.
மனிதனின் வேண்டா உறவுகள் என்று சுகி சொல்வது,
பலகீனமான அன்பு,
புலனடக்கமின்மை,
கோபம்,
வஞ்சனை,
பேராசை,
பாலுணர்ச்சி,
தற்புகழ்ச்சி,
பிறர் பொருளை அபகரித்தல்,
போதைப்பழக்கம்,
புலால் உண்ணல்,
பொறுப்பற்ற செயல் ஆகியவை. (பக்.236).வெளியீடு.கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு,தி.நகர்,சென்னை 17.

# பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை #

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top