Close
அக்டோபர் 5, 2024 6:53 மணி

புத்தகம் அறிவோம்… திருக்குறள் 100..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“அம்மாவை கடவுளாக மதித்தவர். பேராசைப் படாதே. உன் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய், தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய் என்று அம்மா சொன்னவற்றை இன்றும் வேதவாக்காகக் கடைபிடிக்கிறார்.

திருமணம் செய்துகொள்ளவில்லை. இறந்ததும் உடலை மருத்துவக்கல்லூரி பரிசோதனைக்கு கொடுத்துவிடுங்கள் என்று உயில் எழுதிவைத்துவிட்டார். இத்தனை நற்குணங்க ளும் பொருந்தியவர்தான் 82 வயதில் நம்மோடு வாழும் நவீன கர்ணன் ‘பாலம்’ நிறுவனத்தின் தலைவர் கல்யாணசுந்தரம்.

இது போன்ற தவப்புதல்வர்களைப் பெருமைப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:

யான்எனது எனும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.(பக்.111).

நடிகர் சிவகுமார் தமிழ் சமூகத்தின் அதிசய மனிதர்களில் ஒருவர்.சினிமா உலகத்தில் இருந்தால்கூட ஒழுக்கத்தோடு இருந்தவர்களில் இவரும் ஒருவர் . தன்னுடைய 62வது வயதில் “ஒழுக்கம்” என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுவார்.

“நான் தமிழ்ச் சினிமாவில் நாற்பது ஆண்டுகள் இருந்திருக் கிறேன். மனிதனுடைய ஒழுக்கத்திற்கு சவால் விடக்கூடிய அத்தனை அம்சங்களும் அங்கே உண்டு…அப்படிப்பட்ட உலகத்தில் நான் ஒரு ஒழுக்கமானவனாக இருந்து வெளியே வந்திக்கிறேன். அதனால்தான் இன்றும் ஒடுகின்ற பேருந்தில் ஓடி ஏறக்கூடிய உடல் வலிமை எனக்கிருக்கிறது”.

மற்றொன்றையும் குறிப்பிடவேண்டும். ஒன்றிலிருந்து வெளியே வந்தபின் திரும்பி அதற்குள் செல்வதில்லை. சினிமா உலகத்திலிருந்து வெளியே வந்தபின் பிறகு திரும்பி அங்கே போகவில்லை. அதேபோன்றே தொலைக்காட்சித் தொடரும். இப்போது முழுமையாக இலக்கியம் வாசிப்பது, உரையாற் றுவது என்று தன் முழு அர்ப்பணிப்பையும் இதில் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

அப்படி ஒரு பெரும் இலக்கிய வாசிப்பின் வெளிப்பாடுதான் “திருக்குறள் 100”. தான் சந்தித்த மனிதர்களின், அமைப்பு களின் உள்ளார்ந்த விஷயங்களை திருக்குறளோ ஒப்பிட்டு ஆற்றிய உரையின் தொகுப்புதான் இது.

இதில் 100 குறள்தான் இருக்கிறது. ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட உண்ணத மனிதர்களின் உயரிய குணங்களை நம் கண் முன்னே படமாக்கி காட்டியிருக்கிறார் சிவகுமார்.

கவிஞர் புவியரசு, சாலமன் பாப்பையா, சிற்பி பாலசுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி, முனைவர் தெ.ஞானசுந்தரம், மயில்சாமி அண்ணாத்துரை, முனைவர் கு.வே.பாலசுப்பிர மணியன், தமிழருவி மணியன், இளம்பிறை மணிமாறன் ஆகியோர் மிகச்சிறப்பான பாராட்டுக்களை இந்நூலுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள உயரிய விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டும் மற்றதைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த நூல்.அனைவரும் வாசிக்க வேண்டும்.அல்லயன்ஸ் வெளியீடு-928928 1314.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top