Close
ஜூலை 8, 2024 11:28 காலை

புத்தகம் அறிவோம்.. பாதி நீதியும் நீதி பாதியும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

தமிழக நீதித்துறை வரலாற்றில் நீதியரசர் சந்துருவுக்கு முக்கிய இடமுண்டு. “Judicial Activism” என்று சொல்லப்படுகிற, நீதித்துறையில் சில முன்னெடுப்புகளை எடுத்துச் சென்ற பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்று சந்துருவும் அந்த செயல்பாடுகளில் முன்னிருப்பவர்.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்று – கிருஷ்ணய்யர் கேரளாவில் இடதுசாரி அரசில் அமைச்சராக இருந்தவர்-இடதுசாரி இயக்கத்தோடு மிக நெருங்கிய தொடர்பிருந்தும், அதை தனது வழக்கறிஞர் தொழிலோடோ, அதன் பின் நீதியரசர் பதவியோடோ இணைத்துக்கொண்டதில்லை.

நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறவர்களுக்கு தரப்படுகின்ற பிரிவு உபச்சார விழாவைக்கூட ஏற்காதவர்.
ஜெய்பீம் படத்தின் சூர்யா பாத்திரம் சந்துருவின் நிஜ பாத்திரம். தான் நீதிபதியாக பதவி வகித்த 7 ஆண்டுகளில் 90,000 வழக்குகளை விரைந்து முடிவு செய்தவர். இவரின் வெளிப்படையான உரையாடல்களால் பலரின் வெறுப்பைச் சம்பாதித்தவர்.

அவர், இந்து தமிழ் திசை , ஜூனியர்விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை கல்வி இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “பாதி நீதியும் நீதிபாதியும்” நூல். இதில் நீதி பாதியும் என்பதில் பா எழுத்தின் கால் அடைப்புக் குறிக்குள் வைத்து நீதி பாதியும், நீதிபதியும் என்ற பொருளில் இருக்கிறது.

மொத்தம் 46 கட்டுரைகள் இதில் உள்ளன. நமது கல்வி முறை , நீட் தேர்வுகள். ஆசிரியர் அமைப்புகள், ஊராட்சி அமைப்புகள், ஆளுனரின் செயல், அயல் மாநில பணியாளர்கள் என்று நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றி அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கட்டுரைகளை வரைந்திக்கிறார் நீதியரசர். நிகழ்காலப் பிரச்னைகள் கடந்தகாலத் தரவுகளோடு அமைந்திருப்பது கட்டுரைகளின் சிறப்பு.

“சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்திற்கும் மேலாக விரிவான சரித்திரப் பின்ன ணியோடும், சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுத்தாராயும் இக்கட்டுரைகள் சட்டத்துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு” என்கிறார் தனது பதிப்புரையில் இந்து தமிழ்திசை ஆசிரியர் அசோகன். இந்து தமிழ்திசை வெளியீடு.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top