Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணிக்கு அனுமதி: தொல்லியல் கழகம் வரவேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம்

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணிக்கு அனுமதி: தொல்லியல் கழகம் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையின் மிக முக்கிய அடையாளமாக இருக்கிற பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என நாம் மேற்கொண்ட தொடர் முயற்சி தற்போது முழுமையடைந்து இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் நமது தொடர் கள ஆய்வுப் பணிக்கும்,ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் நாம் நீதிமன்றத்தை அணுகி அகழ்வாய்வு நடத்த வேண்டும் என நீதிப் போராட்டம் நடத்தியதற்கும்,முழுமையான வெற்றி கிடைத்திருப்பது பெருமிதமளிக்கிறது.

மதுரை உயர்நீதி மன்றத்தில் சட்டப்போராட்டத்திற்கு உதவிய உதவிய புதுக்கோட்டை வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியம் அவர்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன்  தொடர்ந்த வழக்கில் அகழ்வாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவு பெற்றோம்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் இள.இனியனை இயக்குனராக கொண்டு அகழ்வாய்வு பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர்  தொடங்கி வைத்தனர். பின்னர் , புதிய கண்டுபிடிப்புகளுடன் அகழ்வாய்வு பணியும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், பொற்பனைக் கோட்டை அகழ்வாய்வை, விரிவான அளவில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர், தொழிலாளர் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு  ஆகியோருக்கும் நேரடியாக சென்று மனு அளித்தோம்.

அது மட்டுமின்றி,கடந்த ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு அதனை ஏற்பளித்து அகழ் ஆய்வு  நடத்திட அனுமதி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

புதுக்கோட்டை
பொற்பனைக்கோட்டை

இந்த அனுமதியை பெறுவதற்காக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்மயநாதன் , நாடாளுமன்ற மேலவை  உறுப்பினர் எம்.எம் அப்துல்லா  , சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா , மூத்த வழக்கறிஞர் கே.கே செல்ல பாண்டியன் ,

தொல்லியல் கழக மாநாட்டு குழுவின் கௌரவ தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், மேற்கொண்ட முயற்சிக்கு பலனாக யொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசே மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இந்த அனுமதியை பெறுவதற்கு பெரும் அளவில் ஒத்துழைப்பு நல்கிய தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும்,இந்திய தொல்லியல் துறையின் இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக் கும், மாநில அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும்,

வேப்பங்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவர் ராஜாங்கம்,பொற் பனைக்கோட்டை ஊராட்சியின் அனைத்து பொது மக்களுக்கும்,  எங்களது நெஞ்சம் நிறைந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பத்திரிக்கை மற்றும் பல்லூடக நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெற்றியில் பெரும்பங்கு உண்டு.

தமிழ்நாடு அரசின் இந்த அகழ்வாய்வுப் பணி என்பது புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்திற்கே வலுவான வரலாற்று ஆதாரங்களை பெற்றுத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த நற்செயலுக்கு புதுக்கோட்டையில் இயங்கும் அனைத்து அமைப்புகளும், பொதுநல நோக்கர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தலைவர் கரு.ராசேந்திரன்,  நிறுவனர் ஆ. மணிகண்டன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top