Close
செப்டம்பர் 20, 2024 12:45 காலை

அந்தமானில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு விருது

தமிழ்நாடு

அந்தமானில் நடைபெற்ற உலக ஹைக்கூ இரண்டாவது மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ‘ தமிழ்க்கவிதைப் பேரொளி ‘ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

அந்தமானில் நடைபெற்ற உலக ஹைக்கூ இரண்டாவது மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு, தமிழ்க் கவிதைப் பேரொளி  என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தூண்டில் ஹைக்கூ கவிதை இதழும், இனிய நந்தவனம் மாத இதழும், அந்தமான் தமிழர் சங்கமும், தமிழ் ஹைக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு’ அந்தமானில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை கவிஞர் தங்கம்மூர்த்திக்கு  தமிழ்க் கவிதைப் பேரொளி விருதினை அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் எல். மூர்த்தி வழங்கினார்.
விருதுபெற்ற கவிஞர்தங்கம்மூர்த்தி கூறியதாவது:  பல புதிய கவிஞர்களிடத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை அம்மாநாடு விதைத்திருக்கிறது. ஏராளமான பேராளர்கள் பெரும் ஆர்வத்தோடு இம் மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியை தந்தது. கடல் கடந்து வந்து தமிழ் வளர்க்கும் அந்தமான் தமிழர் சங்க அரங்கில் இம்மாநாடு திட்டமிட்ட நேரத்தில் தொடங்கி, திட்டமிட்டவாறு தொடர்ந்து, மிகச் சரியாக நிறைவுற்றது.
மாநாடு முடிந்ததற்குப் பிறகும் கூட அந்த அரங்கை விட்டு எழ முடியாமல் ஏக்கத்தோடு அமர்ந்திருந்த கவிஞர்களை காண முடிந்தது. கவிஞர்கள் எப்போதுமே அழகோடும் உணர்வோ டும் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர்கள். அழகு நிறைந்த அந்தமான் தீவில் இந்த உணர்வுகளுக்கு செயல் வடிவம் தந்து மாநாட்டுத் திட்டமிடலில் தேர்ச்சி பெற்ற தன் அனுபவத்தால் துளியும் பிசகாத உண்மைத் தன்மையோடு இம் மாநாட்டை சிறப்பாக நடந்தேறியது.
நந்தவனம் சந்திரசேகரன். அவருக்கு உற்ற துணையாக, ஊக்க மருந்தாக முழு ஒத்துழைப்பை வழங்கி முன் நின்று வென்றார் கவிஞர், பால சாகித்திய பிரஸ்கர் விருதாளர் மு. முருகேஷ் மாநாட்டில் ஹைக்கூக்கள் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, செல்லும் பாதை என பல தளங்களில் விவாதங்கள் நடந்தன.
ஒவ்வொரு பேச்சிலும் ஐந்தாறு ஹைக்கூக்கள் மின்னல்களைப் போல் பளிச் பளிச்சன வெளிச்சத்தை பரப்பின. ஹைக்கூ தனக்குத் தந்த அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டது மன நிறைவைத் தந்தது என கவிஞர் தங்கம்மூர்த்தி தெரிவித்தார்.
விழாவில், அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் எல் . மூர்த்தி  பங்கேற்று விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். கவிஞர் பா. தென்றல் நிகழ்வை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு முறை அவர் ஒலிபெருக்கி முன் வரும்போதும் ஒரு ஹைக்கூவை சொல்லியே தொடங்கினார். ஹைக்கூவை கொண்டாடத் தெரிந்தவர்கள் கூடியிருந்த அவை என்பதால் எல்லா ஹைக்கூக்களும் தனக்குரிய கைதட்டல்களைப் பெற்றன.
சொந்த ஊரில் விழா நடத்தவே திணறுகிற வேளையில் கடல் கடந்து  அந்தமானுக்கு வந்து,   கவிஞர் மு. முருகேஷ், கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன், அந்தமான் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கணேசன், கவிஞர் பா. தென்றல் ஆகியோர் மிக நேர்த்தியாக இந்த மாநாட்டை நடத்திய  பெருமைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top