Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

ஈரோடு உதயமான நாள் (செப்16) இன்று..

ஈரோடு

ஈரோடு உதய நாள் இன்று(செப் 16)

இன்று ஈரோடு மாநகரின் பிறந்த நாள்

ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி ஏ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. ஈரோடு நகரின் வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்ட நாளாக இந்த நாள்தான் கருதப்படுகிறது.  அந்த வகையில் ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப்படும் ஈரோடு இன்று   தனது உதய (பிறந்த) நாளைக் கொண்டாடுகிறது.

ஈரோடு நாள் குறித்து மறைந்த கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.ராசு தனது பதிவில் கூறியிருப்பதாவது,
24 கொங்கு நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் பழம்பெரும் 32 ஊர்களில் ஈரோடு ஒன்று. இதில் 24 நாடுகளை 4 கட்டமனையாக(மாகாணம்) பிரித்ததில் ஒன்றான ஈரோடு, கட்டமனையின் தலைநகராக விளங்கியது.

இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது. அதில் சிறுபடையும், தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஹைதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. 2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.

திப்பு சுல்தான் மறைவுக்குப் பின் (1799), கம்பெனியினர் பவானியைத் தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்ட நொய்யல் வடக்கு மாவட்டத்தில் ஈரோடு இருந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் 1804இல் உருவானபோது, பெருந்துறை வட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமமாகவே ஈரோடு இருந்தது. 1868இல் ஈரோடு தனி வட்டமாக  உருவக்கப்பட்டது.

ஈரோடாக மாறிய ஈரோடை:
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையில் அமைந்ததால், ஈரோடை- ஈரோடு ஆனது. ஈரோடு மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது. ஈரோடு கோட்டை, ஈரோடு பேட்டை என இரு பகுதியாக அழைக்கப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டு ‘ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம்’ என்று கூறுகிறது.

மூன்று, மூன்றாய் கோயில்கள்:
ஈரோட்டில் அமைந்துள்ள 3 சிவன் கோயில், 3 பெருமாள் கோயில், 3 அம்மன் கோயில்கள் சிறப்புமிக்கது. சோழர் கட்டிய கொங்குநாட்டு முதல் கோயிலும் (907 இல் பள்ளிகொண்ட பெருமாள் கோயில்), முதல் கொங்குச் சோழனாகிய மகிமாலய இருக்குவேள் ஆன வீரசோழன் கட்டிய கோயிலும் (932ல் மகிமாலீஸ்வரம்) காவிரிக் கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீசுரமும் (சோழீஸ்வரர் கோவில்) இங்குள்ளது.

கொங்கு நாட்டை வென்ற பிற அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் வந்து, கொங்கு நாட்டு அரசராக முடிசூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் இக்கோயில் ராஜ்ய அபிஷேக விண்ணகரம் எனப்பட்டது.

பெரியார் வீட்டில் தங்கிய மகாத்மா காந்தி:
பெரியார் 1917 -ல் ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராகி, 3 ஆண்டுகள் பதவி வகித்தார். விடுதலை இயக்கத்தில் ஈரோடு தன் பங்கைச் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. ஈரோட்டுக்கு 4 முறை வந்த காந்தியடிகள் தம் இரண்டாவது வருகையின் போது, 1921, செப்டம்பர் 25-ஆம் தேதி பெரியார் வீட்டில் தங்கினார்.

அன்று அவர் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மா ளும் கள்ளின் கொடுமையைக் கூறினர். இதனால் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலை காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்தார். இதுகுறித்து, 1921 டிசம்பர் 22இல் ‘யங் இந்தியா’ இதழில் ஈரோட்டுப் பெண்கள் என்ற தலைப்பில் காந்தியடிகள் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வைஸ்ராயிடம் பேசலாம் என்று சில தலைவர்கள் கூறியபோது, மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டு பெண்கள் இருவர் கையில் உள்ளது என்று காந்தியடிகள் கூறினார். அந்தளவிற்கு கள்ளுக்கடை  எதிர்ப்புப் போராட்டத்தில் ஈரோட்டின் பங்கு இருந்தது.

1860 -இல் அரசு தொடக்கப் பள்ளி:
காந்தியடிகளுக்கு அவர் வாழும்போதே ஈரோட்டில் 1927 ஏப்ரல் 9 மற்றும் 1939 அக்டோபர் 1 -ஆம் தேதி என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன. கடந்த 1822ஆம் ஆண்டு கணக்கின்படி, ஈரோடு உள்ளிட்ட அன்றைய கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 6 லட்சத்து 38 ஆயிரத்து 199 பேர். பள்ளி செல்பவர் எண்ணிக்கை 8,930. படித்தோர் விழுக்காடு 1.39 சதவீதம். அதிலும் பெண்கள் பள்ளி சென்றவர் 82 பேர் மட்டுமே.

கடந்த 1860 -இல் ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சாட்சியாக விளங்கி வருகிறது. இதையடுத்து 1876-இல் நகர பரிபாலன சபை டவுன் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

முதல் கல்லூரி:
தாசப்ப அய்யர், அண்ணாசாமி அய்யங்காரும் இணைந்து 1887இல் டவுன் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி நடத்த முடியாமல், லண்டன் மிஷின் சபைக்கு விற்றனர். பெரியாரின் தந்தை வெங்கட நாயக்கரும், முதலாளி ஷேக் தாவூதின் தந்தையார் அலாவுதீன் சாய்ப்பும் (டாக்டர் அமானுல்லா பாட்டனார்) எல்லாச் சமூகத்தாரையும் இணைத்து 1899 -இல் மகாஜன உயர்நிலைப்பள்ளியைத் தொடங்கினர்.

ஜூலை 12, 1954இல் மகாஜனக் கல்லூரியை ஆரம்பித்தனர். இதுவே மாவட்டத்தின் முதல் கல்லூரி, மகாஜன கல்லூரி பிற்காலத்தில் சிக்கய்ய நாயக்கர் மகாஜனக் கல்லூரியாகி, இன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக உள்ளது.

பாரதியின் கடைசி வெளியூர் பயணம்:
கடந்த 1927 ஏப்ரல் 9 -ஆம் தேதி மூன்றாம் முறை நகராட்சித் தலைவராக இருந்த சீனிவாச முதலியாரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டி அருகே சீனிவாசா பூங்கா ஏற்படுத்தப்பட்டது. (பின்னர் பீப்பிள்ஸ் பார்க், வ.உ.சி., பூங்கா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்போதும் இந்த தண்ணீர் தொட்டி வ.உ.சி. பூங்காவில் சாட்சியாக உள்ளது)

காரனேஷன் ஹால் கட்டப்பட்டு அதில் காக்ஸ் ரீடிங் அறை திறக்கப்பட்டது. திறப்பு விழா செய்தவர் அப்போதைய முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன். பெரியார் குடியரசு பதிப்பகம் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.

கி.பி. 1282 -இல் வெட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாயால், ஈரோடு வளம் பெற்றது. கால்வாயின் கீழ் பெரும்பள்ளம் செல்ல 1282இல் பாலம் கட்டப்பட்டது. உலகப் பாலங்கள் நூலில் இந்த பாலம் இடம் பெற்றுள்ளது.

இப்போதும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் அருகே இந்த பாலம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளை தொடங்கிய பாரதி வாசக சாலை ஆண்டு விழாவுக்கு, ஜூலை 31, 1921 இல் பாரதியார் வந்தார். இதுவே அவரின் கடைசி வெளியூர் பயணமாக அமைந்தது.
மஞ்சள் மாநகரம்:
கடந்த 1973இல் நூற்றாண்டு விழாவை நகராட்சி கொண்டா டியது. 2007 டிசம்பர் 29இல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சி ஆனது. ஈரோடு மஞ்சள் சந்தை இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள் ளது. விசைத்தறியில் முன்னணியில் உள்ளது.

மத்திய, மாநில உதவியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக கட்டப்பட்டுள்ள டெக்ஸ்வெலி ஜவுளி விற்பனை மையம் ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல உள்ளன.

போரையே வென்ற ஊர்:

மரம் வளர்ப்பு, ஊனமுற்றோர் மறுவாழ்வில் சக்தி மசாலா நிறுவனம் சிறப்பாக பணியாற்றுகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. 1944இல் ஈரோட்டில் முதலில் தொடங்கப்பட்ட கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1979 செப்டம்பர் 17 -இல் அமைக்கப்பட்ட மாவட்டத் தலைநகரான ஈரோடு, முன்பு ஏற்பட்ட போர்கள், புயல், பூகம்ப அழிவை வென்று, இன்று பல துறைகளிலும் முன்னேறி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

#செய்தித்தொகுப்பு -ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top