Close
ஜூலை 7, 2024 9:45 காலை

புதுக்கோட்டைக்கு பெருமை… கவிஞர் தங்கம்மூர்த்திக்கு தேசிய விருது…

தமிழ்நாடு

கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்திக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான தேசிய விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது

இந்தியாவில் சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் நிகழ்வை எஜுகேஷன் பிளஸ் பத்திரிகையும் ஹைப் எட்ஜ் நிறுவனமும் இணைந்து புதுதில்லியில்  நடத்தியது.

இந்தியாவிலிருந்து சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை எஜுகேஷன் பிளஸ் பத்திரிக்கை எடுத்து நடத்தியது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் 100 கல்வியாளர்கள் பங்கேற்றனர். அந்த 100 கல்வியாளர்களில் மிகச்சிறந்த 10 பள்ளி முதல்வர்களுக்கான சிறப்பு விருதினை அந்நிறுவனம் அறிவித்தது.

அதில் தனித்துவத்துக்காகவும், கல்வியைத் தாண்டி பிற துறைகளில் மாணவர்களை வல்லவர்களாக உருவாக்கும் தனித் திறனுக்காகவும் சிறந்த 10 முதல்வர்களில் ஒருவராக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு
தேசிய விருது பெற்ற கவிஞர்தங்கம் மூர்த்தி

தங்கம் மூர்த்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் சிறப்பான சாதனைகளைப் புரிந்து வருபவர். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினையும் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதினையும் பெற்றவர்.

தன் பள்ளியில் முதன்முதலாக ‘புத்தகம் இல்லா நாள்’ ஒன்றை அறிமுகப்படுத்தி புதுமையை நிகழ்த்தினார்.அது மட்டுமல்ல மாணவர்களை களப்பயணங்களுக்கு அழைத்துச் செல்வதி லும், பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதிலும் ,மாணவர்களை பல போட்டிகளில் பங்கேற்கச் செய்து தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், மற்ற பள்ளிகளில் இருந்து மிக வித்தியாசமாகபள்ளியை நடத்துவதிலும் தங்கம் மூர்த்தி தனது தனித் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது திறமைகளை அங்கீகரித்துஎஜுகேஷன் பிளஸ் நிறுவனம் அவருக்கு சிறந்த கல்வியாளருக்கான விருதினையும், சிறந்த பள்ளி முதல்வருக்கான விருதினயும் வழங்கிச் சிறப்பித்தது.

நிகழ்வில் விருத்தாளர்கள் சார்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி ஏற்புரையாற்றி பேசியதாவது: தொழில் நுட்பங்களை நோக்கி கல்வி நகர்கிறது.தொழில் நுட்பங்கள் வகுப்பறைகளை ஆக்கிரமித்த போதும் இந்திய கிராமங்களில் வசிக்கிற கடைக் கோடி ஏழைக்கும் என்றைக்கு கல்வி சென்று சேர்கிறதோ அன்றைக்குத்தான் கல்வி அர்த்தப்படும்.

மாணவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து மாணவர்களின் மனங்களில் விஷத்தை பரப்பும் போதைப் பழக்கங்கள் அறவே ஒழிக்கப்பட்டால் தான் ஓர் ஒழுக்கமான சமூகத்தை நாம் கட்டமைக்க முடியும்.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவும், ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை செதுக்கவும், எல்லோருக்கும் கல்வியை பாரபட்சம் இன்றி வழங்கவும் ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என்றார் அவர்.

கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தங்கம் மூர்த்தி தன் கவிதைகளை தமிழில் வழங்கிய போது தமிழின் இனிமையைக் கேட்டு அரங்கத்தில் அமர்ந்து இருந்தோர் அனைவரும் பலமாகக் கைதட்டி பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top