‘உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!’ எந்த சுனாமியாலும் அழியாதது, தீப்பிடிக்காதது கல்வி ஒன்றுதான். பணம் கொடுத்து வேண்டுமானால் பட்டதாரி ஆகலாம். படிப்பை வாங்க முடியாது. அள்ள அள்ள ஊறும் மணற்கேணி மாதிரி வற்றாத கல்விச் செல்வத்தை வைத்துப் பாதுகாக்க சுவிஸ் வங்கி வேண்டாம். சொந்தத் தலையே போதும். எந்தத் தணிக்கை அதிகாரிக்கும் அஞ்ச வேண்டியது இல்லை. “கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருந்தப் புறம்பாகப் பொருள் தேடி அலைவானேன்?.
இந்த ஆண்டு (2012) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்’பத்ம பூஷன்’ டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றதன் நூற்றாண்டு. புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் மாணவி. தென் இந்தியாவில் முதல் புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாரின் முயற்சியால் அடையாறில் துவக்கப் பெற்றது.
1926 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் பங்கேற்ற ஒரே ஒரு இந்தியர் இவர்தான் என்பதும் சிறப்புச் செய்தி. இந்திய வரலாற்றிலேயே தமிழக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும், இவரே. உலகிலேயே சட்டமன்ற குழுவின் துணைத் தலைவர் ஆன முதல் பெண்மணி என்ற உலகப் புகழும் இவருக்குண்டு….
“உண்மையில் இன்றைய இளைய தலைமுறைக்கு வள்ளுவரின் தெளிவான அறிவுரை இது. “அன்(பு), அறிவு, தேற்றம், அவாமின்மை இந்நான்கும் நன்(கு) உடையான் கட்டே தெளிவு” (குறள் 513) எந்தக் காரியத்திலும் உள்ளார்ந்த அன்பு செலுத்த வேண்டும்.
ஒரு ஈடுபாடு, ஆர்வம் அவசியம். ஈடுபட்ட பணி குறித்து அறிஞர்கள், நூல்கள் வழங்கும் முழு அறிவும் திரட்டப்பட வேண்டும். சேகரித்தத் தகவல்களில் தம் துறைக்குத் தேவையான குறிப்புகளை மட்டும் அரித்து எடுத்துத் தெளிவு (தேற்றம்) பெற வேண்டும். இறுதியாக நம் ஆராய்ச்சி முடிவு இப்படித்தான் அமைய வேண்டும் என்கிற ஒரு தலையான எதிர்பார்ப்பு கூடாது.
“புதுடெல்லி ஜே.சி. கபூர் கணிப்பின்படி 2068 ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவிலேயே அமெரிக்கரின் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பான். அதனால் உலகத் தொழில் அனைத்தும் செய்து வாழ்வோம் இந்த நாட்டிலே. ”
-புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் 18.2.2012ல் நெல்லை. சு.முத்து அவர்கள் ஆற்றிய பட்டமளிப்பு உரையிலிருந்து..சுவடுகள், (பக். 320 – 23). மன்னர் கல்லூரியில் ஆற்றிய உரைதான் அவர் ஆற்றிய முதல் பட்டளிப்பு உரை.
நெல்லை சு.முத்து எனது மனதுக்கு நெருக்கமான ஒரு மனிதர். இரண்டு முறை அவரை புதுகைக்கு அழைத்து வந்திருக்கிறேன்.ஒருமுறை மன்னர் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு, மற்றொரு முறை புதுகை புத்தகத் திருவிழாவிற்கு.
பி.எஸ்சி., வேதியியல் பட்டம் மட்டுமே பெற்ற ஒருவர் விண்வெளி முதுநிலை விஞ்ஞானியாக உயர்ந்ததோடு மட்டுமல்ல, 120 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்திருக்கிறார். “கல்வித்துறை அறிஞராக அன்றி, விஞ்ஞானியாக, இத்தனை நூல்கள் எனது தாய் மொழியில் படைத்தவர்கள் உலகில் வேறு எவரும் இருந்தால் நான் இரண்டாம் இடம் தான் ” என்பார் முத்து. அதோடு மட்டுமல்லாமல் 500க்கு மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். கட்டுரைகள் வாசித்திருக்கிறார்.
கற்றதும் பெற்றதும் மற்றவர்க்கே! என்ற கொள்கையுடையவர் முத்து. தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையை எல்லாம் தான் பயின்ற பள்ளிக்கு, கல்லூரிக்கு, பல்கலைகழகத்துக்கு வழங்கியவர்.
பெ.நா.அப்புசாமி, போன்று அறிவியல் தமிழை வளர்த்தெடுத்ததில் நெல்லைக்கு பெரும் பங்குண்டு. அறிவியல் தமிழுக்கு பேரிழப்பு அவரின் மறைவு.தென்கச்சி போன்று எளிமையாக ஆரவாரமின்றி உரையாற்றுவார். வாய்திறந்தால் அறிவியல் தகவல்கள் கொட்டும்.
அப்துல்கலாம் உடன் நெருங்கிப் பயணித்த இவர், அவர் இந்தியாவின் குடியரசு தலைவராக வர வேண்டும் என்ற கருத்தை முதலில் பொதுவெளியில் சொன்னவர். அறிவியலில் மட்டுமல்ல சமையற் கலையிலும் கை தேர்ந்தவர் இவர்.
இங்கே உள்ள சுவடுகள் மற்றும் அறிவியல் வரலாறு மூன்று பாகங்களைப் பற்றி முன்பே பதிவிட்டிருந்தாலும், அவருக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் பதிவிடுகிறேன்.
சுவடுகள் அவரைப் பற்றிய புகைப்பட ஆல்பம் எனலாம். சிறு வயது முதல், இந்த நூல் பதிப்பிக்கின்ற நாள் வரையில் எடுக்கப்பட்ட முக்கிய படங்கள், எழுதிய நூல்கள், முதல் கவிதை, முதல் சிறுகதை, முதல் ஹைகூ கவிதை , முதல்பாடல், முதல் மொழிபெயர்ப்பு, இந்தித் தேர்வில் முதல் பரிசு பெறுவது,பங்கேற்ற கருத்தரங்குகள், கொடுத்த நன்கொடைகள் , பெற்ற விருதுகள் – இன்னும் பல பல- யாவும் சுவடுகளில் பதிவு செய்திருக்கிறார்.
இது போன்ற வேறு யாரும் நூல் எழுதியிருக்க வாய்ப்பில்லை.
மற்றொன்று அறிவியல் வரலாறு. பழங்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான அறிவியல் வரலாற்றை, கண்டுபிடிப்புகளை, விஞ்ஞானிகளை எளிய தமிழில் நமக்கு சித்திரமாக்கித் தந்திருக்கிறார்.
(வானதி பதிப்பகம்)
நல்ல அறிவியல் அறிஞரை, அறிவியல் நூலாசிரியரை, கவிஞரை, உரையாளரை, கதையாசிரியரை, மொழிபெயர்ப்பாளரை, கொடையாளரை இன்று தேசம் இழந்துள்ளது.அவர் மறைந்தாலும், அவரின் நூல்கள் காலந்தோறும் அவர் புகழ் பாடும்.
# பேராசிரியர் சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை#