Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

பாரதிராஜா – வைரமுத்து – இளையராஜா கூட்டணி ஏன் அவ்வளவு சிறப்பு?

தமிழ்நாடு

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணி

பாரதிராஜா – வைரமுத்து – இளையராஜா கூட்டணி ஏன் அவ்வளவு சிறப்பு என்பதை பார்ப்போம்

இளையராஜா – பாரதிராஜா – வைரமுத்து கூட்டணி எப்படி உருவானது? என்னென்ன மாயஜாலம்  செய்தார்கள்? எப்படி  பிரிந்தது? இளையராஜா – பாரதிராஜா – வைரமுத்து கூட்டணி.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில இயக்குநர் – இசையமைப்பாளர் – பாடலாசிரியர் சக்கை போடு போடுவார்கள். அப்படி 80 களில் கொடிகட்டிப் பறந்த ஒரு கூட்டணி பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து. இந்த மூவரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும். ஆனா அது அத்தனையும் ஹிட்.  கொடியிலே மல்லிகைப்பூ, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பூங்காத்து திரும்புமா இப்படி பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1976 -ல் வந்த அன்னக்கிளி படம் மூலமா இசையமைப்பாளரா தமிழ் சினிமாவுக்குள்ள வர்றாரு இளையராஜா. 1977 -ல் 16 வயதினிலே படம் மூலமா இயக்குநரா தன்னோட பயணத்தைத் தொடங்குறாரு பாரதிராஜா.

அதற்கு அப்பறம் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுக்கிறாங்க. 1980-ல இவங்க ஒண்ணு சேர்ந்து நிழல்கள்னு ஒரு படம் பண்றாங்க. அந்த நேரத்துல வைரமுத்து பாரதிராஜாவை சந்திச்சு அவர் எழுதுன கவிதைப் புத்தகத்தைக் கொடுக்கிறார்.

அந்தக் கவிதைகள் பாரதிராஜாவுக்கு பிடிச்சுப் போக, நிழல்கள் படத்துல ஒரு பாட்டு எழுதுனு சொல்றாரு. பாரதிராஜா காட்சியை சொல்ல இளையராஜா டியூன் சொல்ல வைரமுத்து வரிகள் எழுதுறாரு.

அந்த வரிகளை படிச்ச இளையராஜா பாரதிராஜாவை தனியா கூப்பிட்டு, ‘எங்க இருந்துயா இவனைப் பிடிச்ச.. சினிமால பெரிய பெரிய யானைகளையெல்லாம் சாய்க்கப்போறான் இவன்’ அப்படினு பாராட்டுறாரு. அப்படி உருவான பாட்டுதான் ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’. அங்க தொடங்கின இந்த மெகா கூட்டணி உருவாக்குன ஒவ்வொரு பாட்டுமே மக்கள் மத்தியில சக்கை போட ஆரம்பிக்குது.

ஒரு பக்கம் ஆயிரம் தாமரை மொட்டுகளேனு உற்சாக பாடல் இன்னொரு பக்கம் விழியில் விழுந்து இதயம் நனைந்து உயிரில் கலந்த உறவேனு மெலடி இப்படி திரும்பிய திசை யெல்லாம் இந்தக் கூட்டணியோட பாட்டுதான் தமிழ்நாட்டுத் தெருக்கள்ல ஒலிச்சிட்டு இருந்தது.

இப்போ நினைச்சாலும் சிலிர்க்குற மாதிரியான பாடல்கள் வந்தாலும் இந்தக் கூட்டணி சரியா ஆறு வருசம் தான் நீடிச்சது. காரணம் இளையராஜா – வைரமுத்துவுக்கு நடுவில் வந்த விரிசல். வைரமுத்து எழுதிய வரிகளை இளையாராஜா மாத்துறதும், வேறு ஆட்களை வைத்து எழுதுறதும் தான் காரணம்னு சொல்லப்படுது. சில பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்ற சொல்வது அந்த விரிசலை மேலும் பெரியதாக்கி உள்ளது.

உதாரணமாக சிந்து பைரவியில் வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றி விட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்துப் போட்ட பல்லவி தான் பாடறியேன் படிப்பறியேன் என்ற பல்லவி.

நிழல்கள் படத்துல தொடங்கின இவங்களோட நட்பு புன்னகை மன்னன் படத்துல முடிஞ்சு போகுது. இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு முன்பாக கடைசியாக பாரதிராஜா எடுத்த படம் கடலோரக் கவிதைகள். இதற்குப் பிறகு பாரதிராஜா எடுத்த படங்களான வேதம் புதிது, கொடி பறக்குது படங்களின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து தான் எழுதினார்.

அந்தப் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. பாரதிராஜாவின் அதற்கடுத்த படங்களான என் உயிர் தோழன், புது நெல்லு புது நாத்து படங்களுக்கு இசையமைத் தார் இளையராஜா அதில் வைரமுத்து பாடல் எழுதவில்லை. இப்படி இந்த மூவர் கூட்டணி அதன் பின் இணையவே இல்லை.

சில வருசங்களுக்கு முன்னாடி வைரமுத்து, இளையராஜா பத்தி ஒரு கவிதை எழுதிருந்தாரு. அதுதான் இதற்கான பதில்,

‘ஈரமான ரோஜாவை எழுதி விட்டு ஆழியாறு அணையின் மீது நடந்துகொண்டிருந்தோம். திடீரென நீ என்னை துரத்தினாய்… நான் ஓடினேன்… என்னை நீ பிடித்துவிட்டாய்… அப்போது நாம் சேர்ந்து விட்டோம்… ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம். இப்போது முடியுமா…’

இளையராஜா – வைரமுத்து இந்தக் கூட்டணி கடைசியா இணைந்து 36 வருசம் ஆகுது. இத்தனை வருசம் கழிச்சும் இவங்க சேரணும்னு நாம நினைக்குறது தான் இவங்க உருவாக்குன மேஜிக். இனி அதற்கான சாத்தியங்கள் இல்லை தான். ஆனால் இவங்க கொடுத்த அந்த சில பாடல்களே இன்னும் தலைமுறை ரசிக்க போதுமானதா இருக்கும்.

‘பாறையில பூ மொளச்சி பாத்தவுக ஆரு… அன்புகொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு…’ இந்த வரியைப் போல இவர்கள் தந்த பாடல்களுக்கும் ஆயுசு நூறுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top