Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேர் கைது

புதுக்கோட்டை

கொலை வழக்கில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள சிறுநாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). கார் ஓட்டுநரான இவர் புதுக்கோட்டை டிவிஎஸ் சண்முகா நகரில் வசித்து வந்த நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாக இவரை வெள்ளிக் கிழமை இரவு சிலர் வீட்டிலேயே வைத்து வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க ஆலங்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து சிறுநாங்குபட்டியைச் சேர்ந்த கொலையான தமிழ்ச்செல்வனின் சகோதரர் ராஜேந்திரனின் மகன் மதிவாணன் (24), திருக்கோகர்ணம் ராமலிங்க தெருப் பகுதியைச் சேர்ந்த ரகுமான் (19), ஆட்டாங்குடி அடுத்த கீழ விழாக்குடி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (24), புதுக்கோட்டை வடக்கு 5 -ஆம் விதியைச் சேர்ந்த மணிகண்டன் (22), ராஜகோபாலபுரம் சேஷய்யா சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் (27) மற்றும் கீழ 4ஆம் வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீஸார் திருச்சி ரயில் நிலையம் அருகே வைத்து சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சிறார் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வத்துக்கும் அவரது அண்ணன் மகன் மதிவாணனுக்கும் சொத்து பிரச்னை இருந்ததும், மதிவாணனின் அண்ணன் ராஜலிங்கம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வத்தின் வீட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாகவும் அவரது இறப்பிலும் சந்தேகம் இருந்ததாலும் நண்பர்களுடன் சேர்ந்து தனது சித்தப்பா  தமிழ்ச்செல்வனை, அவரது அண்ணன் மகன் மதிவாணன் வெட்டிக் கொன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top