Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

சென்னிமலை அருகே கணவன் மனைவி வெட்டி படுகொலை

ஈரோடு

சென்னிமலை அருகே கணவன் மனைவி கொலை செய்யப்பட்ட வீடு

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கணவன் மனைவி வெட்டி படுகொலை செயப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கரியாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி கவுண்டர் (85) மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் (74).

விவசாயியான முத்துசாமி கவுண்டருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
முத்துசாமி கவுண்டருக்கு உப்பிலிபாளையம் சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் எல்.பி.பி இரட்டை பாலம் பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் உள்ள பண்ணை வீட்டில் முத்துசாமி கவுண்டரும் சாமியாத்தாளும் குடியிருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த வீட்டில் இருவரை தவிர நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர்.கடந்த வாரத்தில் அந்த நாயை யாரோ சிலர் கொன்று விட்டதாகக்கூறப்படுகிறது.

இதனால் இந்த பண்ணை வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு பண்ணை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முத்துசாமி கவுண்டரையும், சாமியாத்தாளையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று விட்டதாகத் தெரிகிறது.

இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தம்பதியர் இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்குத் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தில், எவ்வளவு பணம் நகைகள் கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியவில்லை. கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்களால் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டது.

ஈரோடு
கணவன் மனைவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு

சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், பண்ணை வீட்டில் தனியாக தம்பதியர் வசித்து வந்ததை கண்காணித்த மர்ம நபர்கள் தான் இந்த படுகொலையை செய்துவிட்டு பணம் நகைகளை திருடிச்சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம்.

இந்த கொலையை செய்தவர்கள் நீண்ட நாட்களாக இவர்களை நோட்டமிட்டு திட்டமிட்டு கனகச்சிதமாக கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

பொதுவாகவே பண்ணை வீடுகளில் வெளி நபர்கள் உள்ள நுழைந்தால் அதை தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு வீட்டிலும் நாய்களை வளர்ப்பார்கள். வெளி நபர்கள் உள்ளே நுழையும்போது பட்சத்தில் நாய் குரைப்பதை வைத்து வெளிநபர்கள் வந்திருப்பதை அறிந்து கொள்வார்கள்.

அதேபோல முத்துசாமி கவுண்டர் தம்பதியும் நாய் வளர்த்து வந்துள்ளனர். இந்த நாயை கடந்த வாரம் யாரோ சில மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்று விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இங்குள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் ஒரு சில நபர்கள் வந்து மது அருந்திவிட்டு செல்வதாக முதல் கட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது. மது அருந்த வந்த நபர்கள் தான் இந்த கொலை சம்பவத்தை செய்தார்களா? அல்லது வேறு யாராவது வெளியில் இருந்து வந்த நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

கணவன் மனைவியை கொலை செய்து விட்டு பணம் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் சென்னிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top