உசிலம்பட்டி.
மதுரை,உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர், தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இரவு பணி செய்து விட்டு இன்று மதியம் பணியை முடித்த பின் வீட்டிற்கு சென்ற முத்துக்குமார், அருகில் உள்ள முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார். அங்கு ஏற்கனவே தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பொன்வண்டு என்ற கஞ்சா வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது பொன்வண்டுவின் உடன் வந்த நண்பர்கள் காவலருடன் வாக்குவாததில் ஈடுபட்டு ,கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலருடன் வந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், முத்துக்குமார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பி ஓடிய கஞ்சா வழக்கில் வெளி வந்த பொன்வண்டு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.