Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கந்தர்வக்கோட்டை ஒன்றிய வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட  பேரணியை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா தொடக்கி வைத்தார்.

வார்டு உறுப்பினர்கள் இளவரசி, நவநீதம், திரிசங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா அரசு பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசியதாவது: மாணவர் சேர்க்கை பேரணியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.

அரசு பள்ளியில் செயல்படுத்தி வரும் இல்லம்தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாலை நேரத்தில் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அரசு பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் பயின்றால் 20% அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, உயர்கல்விகள் 7.5% இட ஒதுக்கீடு.

பெண்களுக்கு இலவச உதவி தொகை, மாதந்தோறும் தேன்சிட்டு, ஊஞ்சல் சிற்றிதழ்கள், கண்ணொளி திட்டம் , ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம், விலையில்லா வண்ண சீருடைகள், காலணிகள், விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி, தன்னார்வலர்கள் மகேஸ்வரி, பிரதீபா, பவித்ரா, விஜி ,ரமீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top