Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

நான் முதல்வன் திட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி வழிகாட்டி முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டி முகாமில் மாணவிக்கு சான்றிதழ்வழங்கிய மாவட்ட ஆட்சிய மெர்சி ரம்யா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான ‘உயர்வுக்குப் படி” சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23  -ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ‘உயர்வுக்குப் படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாமினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்.

2022-23 ஆம் கல்வியாண்டில்; பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலின்படி, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில்

வருவாய்த்துறையின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதரச் சான்றுகள்  வழங்கும்  சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் சுமார் 510 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் மேற்படிப்பு மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வங்கிகளின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான கல்விக்கடன் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தேவைப்படும் மாணவர்களுக்கு கடனுதவி பெறுவதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழிகாட்டியாக சிறப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேரவும், நல்லதொரு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ளவும் இந்த சிறப்பு முகாமானது  நடத்தபட்டு வருகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி சேர்ந்திட வேண்டும். எந்தவொரு மாணவர்களும் வழிகாட்டுதல் இல்லாமையின் காரணமாகவோ, தேவையான வசதிகள் இல்லாமையின் காரணமாகவோ உயர்கல்வியில் சேராமல் இருப்பதனை தவிர்க்கும் பொருட்டு இம்மாதிரியான சிறப்பு முகாம்கள் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு கல்வி கடனுதவி பெறுதல் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் வருவாய்த் துறையின் மூலம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு தேவையான சான்றிதழ்களை பெற்று உயர்கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையினை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என  ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன்,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் .சு.இராமர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top