Close
ஜூலை 4, 2024 5:44 மணி

கல்விதான் ஒழுக்க நெறி மாறாத வாழ்க்கையை வழி நடத்தும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ஜி.ரவி

புதுக்கோட்டை

அண்ணா பல்கலைக்கழகத்தேர்வில்கல்லூரிஅளவில் முதலிடம்பெற்ற மாணவி பிருந்தாவுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்துணைவேந்தர் ஜி.ரவி தங்கப்பதக்கம் ,ரொக்கப்பரிசு வழங்குகிறார். உடன் கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன், செயலர் மு.விஸ்வநாதன் மற்றும் முதல்வர் குழ.முத்துராமு ஆகியோர்.

கல்விதான் ஒழுக்க நெறி மாறாத வாழ்க்கையை வழி நடத்தும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ஜி.ரவி.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுளள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் 18-ஆவது பட்டமளிப்பு விழா (16.12.2023)  சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவினை கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு  வரவேற்புரை யாற்றி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.  கல்லூரி செயலாளர் மு.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி  மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி விழாப் பேருரையில் மேலும் அவர் பேசியதாவது:

கல்வி என்பது ஒவ்வொருவரின் எதிர்காலத்துக்கான கடவுச்சீட்டு. கல்வி என்பது நாளைய வாழ்க்கைக்கு இன்றே உங்களை தயார் படுத்தும் மிகப்பெரிய ஆயுதம். வாழ்வின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுதரும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒழுக்க நெறி மாறாத வாழ்க்கையை கல்விதான் வழிநடத்தும். கலாசாரமும், உயர்ந்த பண்பாடும், ஈடில்லா மிகச்சிறந்த நாகரிகமும் கொண்ட நமது தேசத்தின் பெருமைகளை காப்பாவர்களாகவும்,  புகழைப் பரப்புபவர்களாகவும்  இளைஞர்கள் திகழ வேண்டும்.

கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்புகானது மட்டுமல்ல. அது உலகளவில் மிகச்சிறந்த ஆற்றலும், ஞானமும் கொண்ட குடிமக்களை உருவாக்கும் வல்லமை கொண்டது.

புதுக்கோட்டை
அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா என்பது கல்வி நிறுவனங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கை யிலும் இந்தபட்டம் பெறும்நாள் என்பது மிக முக்கியமான தாகும். எனவே அந்தமுக்கியமான நாளில் இன்று பட்டம் பெறும் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இன்று ஒரு புதுவாழ்க்கையின் வாசலுக்கு வந்திருக்கும் இளம் பட்டதாரிகளாகிய நீங்கள் இந்தமிகப் பெரிய உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய சேவை ஆற்றிட உறுதிமொழி எடுத்திருக் கிறீர்கள்.

ஒவ்வொருவரும் இன்று பட்டதாரியாய் உருவாகி இருப்பதன் பின்னணியில் பெற்றோரின் அளப்பரிய தியாகங்கள் இருக்கின்றன. அவர்களின் தியாகங்களுக்கு மறக்காமல் கட்டாயம் நன்றிக் கடன் செலுத்த வேண்டிய மிகப் பெரிய கடமை இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்கள்கல்விக்கு துணைநின்ற ஆசிரியப் பெருமக்களுடன் எப்போதும் ஒருநல்லுறவை மேம்படுத்துங்கள். ஆசியர்கள் தான்  உங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள். அவர்கள் பெற்ற ஞானத்தையும், அனுபவத்தையும் உங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். அப்படி அறிவை அள்ளி வழங்கியஞானமிக்க ஆசியர்களுக்கு எப்போதும் மிகப் பணிவுடன்மரியாதை செலுத்துங்கள்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், அலெக்ஸாண்டர், சுவாமி விவேகானந்தா, அர்ஜூனா, துரோணாச்சாரியா ஆகியோர் இந்த பண்புமிக்க ஆசிரியர் பாரம்பரியத்தின் மிகச்சிறந்த உதாரணமனிதர்கள். கடவுளும் , ஆசிரியரும் ஒரே நேரத்தில் எனக்குஎதிரில் தோன்றினால் நான் முதலில் ஆசிரியருக்குத் தான் மரியாதை செலுத்துவேன். ஏனென்றால் கடவுள் யார் என்பதை காட்டியவர் ஆசிரியர்தானே  என்றார் கபீர்தாசர்.

ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், குடும்பத்தின் மேம்பாட்டிற்கும், ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் கல்விதான் அடிப்படை இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை உயர் கல்வியின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

புதுக்கோட்டை
கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் நம்நாட்டில் வெறும்20 பல்கலைக் கழகங்களும் 500 கல்லூரிகளும் சில ஆயிரக் கணக்கான மாணவர்களும் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்று உயர் கல்வி உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் 1026 பல்கலைக்கழகங்கள், 45 ஆயிரம் கல்லூரிகள் என நாடு முழுவதும் உயர்கல்வியின் நிலைமை முன்னேற்றப்போக்கில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின்ஒட்டுமொத்தமான 27.1% உயர்கல்வியில் நம் தமிழகம் 51.4 சதவீதம்உயர்கல்வித் துறையில் உயர்ந்த இடத்தில் உள்ளது என்பது மாநிலத்தின் மகத்தானபெருமை.

இளம் பட்டதாரிகளே உங்களின் உயர் கல்வி நம் சமூகத்தை மேம்படுத்தும் கருவியாக இருக்கட்டும். உங்களின் தன்னலமற்ற சேவையால் இந்த தேசத்தில் மனித நேயம் பரவட்டும்.

நம் இந்திய தேசம் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஒருமாபெரும் வல்லரசு தேசம் என்ற இலக்கை நோக்கி நம் இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெருமைமிகு தேசத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.

கணினிஅறிவையும் மொழி அறிவையும் தவறாமல் வளர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். அவை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்க உங்களுக்கு துணைநிற்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்றுஉலகம் முழுவதும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதனைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும்இழந்துவிடாதீர்கள்.

வாழ்க்கையில்எப்போதும் சிலஇலக்குகளை முன்வைத்துச் செயல்படுங்கள். ஒவ்வொருவருக்கும் கட்டாயம் ஒருகனவு தேவை. அந்தக்கனவை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை முதலில் கண்டறிய வேண்டும்.

பின்னர் அந்தக்கனவை நிஜமாக்க முடியும் என்ற மன உறுதி யுடனும்நம்பிக்கையுடனும் அதற்காக திட்டமிட்டு உழைக்கத் தயாராகுங்கள். அப்படிநீங்கள் தயாரகும் போது உங்கள் கனவுகட்டாயம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

மூளையில்உதிக்கும் உங்கள் இலட்சியக் கனவினை உங்கள் இதயத்தில் நடவுசெய்து அதற்கு தினந்தோறும் உழைப்பு எனும்நீர் ஊற்றிவந்தால் அந்தக்கனவு மாபெரும் மரமாகி உங்களுக்கு கட்டாயம் பலனளிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.பொறியியல் பட்டதாரிகளுக்கு மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று மத்திய மாநில அரசுகளின் பல்வேறு உதவியுடன் தொழில் முனைவோராக மாறுவது. இது நம் இளைஞர்களுக்கு இன்று கிடைத்திருக்கும் மிகப் பெரியவரம்.

மற்றொன்று மத்திய, மாநில அரசுப்பணிகளுக்குச் செல்வது. மூன்றாவது உயர்ந்த சம்பளத்தில் தனியார் துறைகளில் பணிபுரிவது. சிலர் ஆராய்ச்சித்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.

அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது. புதிய கண்டு பிடிப்புகளும், புதிய அறிவியல் சிந்தனைகளும் நம்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு வரும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு நல்லஆரோக்கியமான உடல்நலம் அவசியம். இன்றைய நவீன கலாசார உலகத்தில் இளைய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் செல்போன் மோகத்திற்கு அடிமையாகி அதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த புதுவகை அடிமை மோகத்தி லிருந்து இளைஞர்கள் விடுபடவேண்டியது மிகவும்அவசியம்.

நல்ல ஆரோக்கியமான உடல்நலம் இல்லையெனில் ஒருவரால் சிறந்த வாழ்க்கையை வாழ முடியாது. எனவே ஒவ்வொரு வரும் குறிப்பாக இளைஞர்கள் உடல்நலனில் தீவிர அக்கறை செலுத்துங்கள்.

தினசரி யோகா, தியானம், உடற் பயிற்சி, நீண்ட தூர நடைப்பயிற்சி போன்றவற்றை ஒரு மணி நேரம் செய்து வாருங்கள். நல்லஆரோக்கியமான வாழ்க்கைதான் மிகச்சிறந்த வெற்றியை ஈட்டித்தரும். அனைவரும் மிகச் சிறந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் என்றார் துணைவேந்தர் ஜி.ரவி

விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றனர். அண்ணாபல்கலைக் கழகத்தேர்வில்கல்லூரி அளவில் துறைரீதியாக சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளாமோனர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top