புதுக்கோட்டை அருகில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர்.
மேலப்பட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகள் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இக்கல்வியாண்டில் ரித்திஸ்ஸ்ரீ, ஜனலெட்சுமி, மகாலெட்சுமி, சிவபாலமுருகன் ஆகிய 4 மாணவ-மாணவிகள் தேர்வு பெற்றுள் ளனர்.
2013 -2014ஆம் கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து 12 வருடங்களாக மேலப்பட்டி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். மேலும் (2020-21)கல்வி ஆண்டிலும் ,(2021-22) கல்வி ஆண்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து முதலிடத்தை இப்பள்ளி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் சுமார் 194 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தேர்வு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வீதம் அவர்கள் +2 முடிக்கும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும். இந்த தேர்வு எழுதுவதன் மூலம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடைபெறும் கிராமப்புற மாணவர்களுக் கான திறனறித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடைபெறும் என்.டி.எஸ்.சி தேர்விலும் வெற்றிபெற்று உதவித்தொகை பெற இது வழிகாட்டியாக அமையும்.
இத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அரசு பணியாளர் தேர்வு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு போன்ற பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வு எழுத அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் மகேஸ்வரன், சரவணன், ஜெயந்தி, இந்திரா, ஜெயலெட்சுமி மற்றும் பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.