புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு சாக்லேட் மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளி நுழைவு வாயிலில் வண்ண வண்ண பலூன்களால் தோரணவாயில் அமைக்கப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தை களுக்கும் ஆசிரியைகள் ஆரத்தியெடுத்து வரவேற்றனர்.
புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக் குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளியின் இயக்குனர் ஆர். சுதர்சன் ஆகியோர் சாக்லேட் மாலையணிவித்து பலூன்கள் மற்றும் சாக்லேட்டுகள் வழங்கி வரவேற்றனர்.
முதல்நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அவர்களுக்கான குளிரூட்டப்பட்ட வண்ண வண்ண பொம்மைகள் வரையப்பட்ட வகுப்பறைகளுக்கு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். வகுப்பறை வாசலில் மிக்கி மௌஸ், டெடிபியர் பொம்மைகள் மாணவர்களை கைகுலுக்கி வரவேற்றன.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லேட் சாப்பிடக் கொடுப்பார்கள். இந்தப் பள்ளியில் மழலைகளுக்கு சாக்லேட் மாலை அணிவித்து மாணவர்களை வரவேற்ற நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் பாராட்டைப் பெற்றது.
விழாவில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப் பாளர்கள் கௌரி, மீனாட்சி, மற்றும் மழலையர் ஆசிரியைகள், மேலாளர் ராஜா, கமல்ராஜ், உதயகுமார் உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகளையும், பலூன்களையும் வழங்கி வரவேற்றனர்.