Close
மார்ச் 7, 2026 11:04 மணி

தாமோதரன்பட்டியில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்..!

நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் .

இந்த நிலையில், பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என,
வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளியை இடித்துவிட்டு பள்ளியில் படித்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள நாடக மேடையில் தற்காலிகமாக கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு மாதத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என நினைத்த ஆசிரியர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளி கட்டிடம் தொடங்காததால் நாடக மேடையில் கல்வி பயின்று வரும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

வெயில் மற்றும் திடீர் மழைக்கு மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்காலிகமாக மாணவர்கள் கல்வி கற்கும் நாடக மேடையும் எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

மேலும் ,6 மாதமாக அரசு அதிகாரிகளிடமும் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடமும் பலமுறை எடுத்துச் சொல்லியும் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான எந்தவித ஆரம்ப கட்ட வேலையும் தொடங்கப்படவில்லை என, கூறுகின்றனர்.

குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், தற்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து 30 குழந்தைகளை பள்ளியை விட்டு நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும் 30 குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டும் உடனடியாக புதிய பள்ளி கட்டிடத்தை தொடங்க வேண்டும். குழந்தைகள் கல்வி கற்பதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடக்க கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தாமோதரன்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்து மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top