நாமக்கல் :
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து திரளான விவசாயிகள் மற்றும் மக்கள் நலக் கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள லத்துவாடியில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் அமைந்துள்ளன. இங்கு, ஏராளமான கால்நடை மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவ-, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளனர். மேலும், லத்துவாடி கிராமத்தில், ஏராளமான விவசாயிகள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில், கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில், 175 ஏக்கரில் தனியார் நிறுவனம் மூலம், தோல் தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசின் வருவாய்த் துறையினர், நிலம் சர்வே செய்து வருவதாக தெரிகிறது. இப்பகுதியில் தோல் தொழிற்சாலை அமைந்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இதனால், மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் உண்டாகும். வருங்கால சந்ததியினரும், தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்படுவார்கள். அதனால், தோல் தொழிற்சாலைக்காக நிலத்தை அளவீடு செய்யக்கூடாது; தோல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், லத்துவாடி பகுதியில், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த சிறைச்சாலை அமைக்கவும் அரசு முயற்சித்து வருவதாக தெரிகிறது. கல்லூரி அருகில் சிறைச்சாலை அமைக்கப்பட்டால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, கல்லூரி வளாகத்திற்கு அருகே சிறைச் சாலை அமைக்கக் கூடாது. உடனடியாக இந்த திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கத் தவறினால் வரும் 28ம் தேதி கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பு, மாணவ மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




