Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாணவர்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கூகுள் மீட் சமூக இணைய ஆய்வரங்கம்

கூகுள் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாணவர்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கூகுள் மீட் சமூக இணைய ஆய்வரங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் கூகிள் மீட் சமூக இணையம் வாயிலாக நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர் கு.தியாகராஜன்  தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் தி.அருள்குமார், மாநிலப்பொருளாளர் ப.உதயகுமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாடத்திட்டக்குழு உறுப்பினரும், கல்வியாளருமான் கவிஞர் நா.முத்துநிலவன் மாணவர்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில்  பேசியதாவது:  தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்டார்.

குறிப்பாக சத்துணவு, சீருடை, விலையில்லா புத்தகங்கள், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட வளர்ச்சித்திட்டங்களோடு,  பிளஸ் 2 படித்த பிறகு உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் என இந்த காலம் அரசுப் பள்ளி மாணவர்களின் பொற்காலம் என்றார். மேலும் இச்செயற்பாடுகளை சற்றே விரிவு படுத்திட அரசு முன் வரவேண்டும்.

தற்போது வழங்கப்படும் வரும் சத்துணவு திட்டத்தை பசி யோடு பள்ளிக்கு வரும் குமரப்பருவத்தில் இருக்கும் பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்குவழங்கி விரிபடுத்தபட்ட சத்துணவுத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சீருடைகள் பல்வேறு அளவுகளில் இருப்பதால் சீருடைகளுக்களுக்கு பதிலாக நேரடியாக சீருடை துணிகளை தனியாகவும்,தையல் கூலியை மாணவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைத்து அவரவர் அளவிற்கு ஏற்ப உள்ளூர் மகளிர் குழுக்கள் மூலம் தைத்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேணடும்.

அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான கழிவறை உள்ளிட்ட வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப் பட்டுள்ள நிலையில்,
அனைத்து பள்ளிகளிலும் துப்புரவு பணியாளர்களை நியமித்து கழிவறை தூய்மையை மேம்படுத்தி சிறுவர் மற்றும் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் சிற்சிறு நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறப்பு நலத்திட்ட அலுவலர்களாக சத்துணவு ஊழியர்களை நியமித்து முழு நேரமும் பள்ளியின் நலத்திட்டங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு,வளாக தூய்மை உள்ளிட்ட பணிக ளை ஒதுக்கீடு செய்வதன் மூலம், ஆசிரியர்கள் முழு நேரமும் கற்பித்தல் பணியை மேற்கொள்ளவும் , தேவையற்ற கற்பித்தல் இடையூறுகளை தவிர்க்க முடியும்.

ஆய்வங்களுக்கு வழங்கப்படக்கூடிய கற்றல், கற்பித்தல் உபகரணங்களை தரமானதாக வாங்கிக் கொள்ள அந்தந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு உரிமை வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் நூலகங்க ளை தரம் உயர்த்துவதோடு நூலக பராமரிப்பு பணிக்கென நலத்திட்ட அலுவலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கலாம்  என்றார் முத்துநிலவன்.

ஆய்வரங்கத்தில் நிறைவுரையாற்றிய மாநிலத்தலைவர்
கு.தியாகராஜன் பேசியதாவது: தற்போதைய அரசு மாநிலத்திற்கு தனியான கல்விக்கொள்கையை அமைத்திட குழு அமைப்பதும், இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக உயர்கல்வி பயிலும் பெண்குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என்பது மாணவிகளை சொந்தக்காலில் நின்று கல்வி கற்பதை ஊக்குவிக்கும் செயலாகும்.

கொரானா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் அடைவு சுணக்கத்தினை மீளுருவாக்கம் செய்வதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது வரும் ஆண்டுகளிலும் இது தொடர்வதற்கு கூடுதல் நிதியை அரசு ஒதுக்கியிருப்பது நம்பிக்கை தரக்கூடியதாகும்.

அதேபோன்று மாணவர்கள் உளவியல் ரீதியில் தயாராவதற்கு பள்ளிகளில் ஓவியம் விளையாட்டு தையற்கலை உள்ளிட்ட வற்றை கற்பது மிகுந்த பலன் அளிக்கும் இவ்விதத்தில் ஏற்கெனவே பகுதிநேரத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர் களை முழுநேர பணியாளராக்கி மாணவர்களின் மனநிலை யை சீர்மை படுத்துவதற்கு அரசு உதவிட வேண்டும்.

மேலும் சத்துணவுத் திட்டத்தை 12 ஆம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்யவும், சீருடை திட்டத்தையும் பன்னிரண்டாம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்வதோடு அளவெடுத்து தைக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை அரசு செய்திட வேண்டும் என்றும் இந்த ஆய்வு சங்கத்தின் வாயிலாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
மாநில அமைப்புச்செயலாளர் செ.ரமேஷ் , மாநில தலைமைநிலையச்செயலாளர் கி.கண்ணதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top