Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா

ஈரோடு

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக , உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்  பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
கொங்கு பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை, பணிவாய்ப்பு ஆராய்ச்சி, வெளியீடுகள் ஆகியவற்றில் நிர்வாகம், பேராசிரியர்கள், ஊழியர்களின் சிறப்பான பணியின் காரணமாக, என்.ஏ.ஏ.சியின் ஏபிளஸ் பிளஸ் தரச்சான்றினைப் பெற்றுள்ளது.

கொரோனா தொற்றுக்குப்பிறகு, கற்றல், கற்பித்தல் மற்றும் பணிபுரியும் முறை ஆகியவை மாற்றம் பெற்றுள்ளது. நீதித்துறையின் அனைத்து செயல்படுகளும் இணைய வழியில் இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் நேரடியான பங்கேற்புடன் கூடிய வாதங்கள் இல்லாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உற்பத்தித்துறை போன்ற துறைகளில் மட்டும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது நமது வாழ்வின் எல்லா பகுதிகளும் தொழில்நுட்பக் இணைந்துள்ளது. கலை அறிவியல், பொறியியல், சட்டம் என எந்த கல்வி பயின்றாலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் போதே, தங்களது திறனை வளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

நீங்கள் கிராமப்புறம், நகர்ப்புறம் என எங்கிருந்து வந்திருந்தாலும், கல்லூரியில் படிக்கும்போதும், மாணவர்களுடன் பழகும்போதும், மதம், பணம், சமூக ஏற்றதாழ்வு இவற்றையெல்லாம் விட மனிதாபிமானமே முக்கியம் என அறிந்திருப்பீர்கள்.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப மாணவர்கள் வாழ வேண்டும். கல்லூரி படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமானது அல்ல. ஒழுக்கமும், ஒற்றுமையும் கூடிய நடத்தையை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடமாகும். வாழ்வின் வெற்றிக்கும், இலக்கை அடையவும் நல்ல நடத்தை என்பது முக்கியமானது.
வகுப்பறையில் கற்பது மட்டுமல்ல அறிவு. சுயமாகவும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக் கொள்வதே அறிவாகும் என்பதை உணர்ந்து அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். உங்கள் தொழிலில் வெற்றி பெற, வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கடினமாக உழைக்க வில்லை என்றால், உங்களுக்கு அதிஷ்டம் இல்லை என்று அர்த்தமாகும். எனவே, வெற்றி பெற கடின உழைப்பும் முக்கியமானதாகும். உங்கள் தொழிலை புதுமையானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகளே, சிறகுகளாய் மாறி எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்.

விழாவில், இளநிலை மாணவர்கள் 1415, முதுநிலை நிலை மாணவர்கள் 309 பேர் என மொத்தம் 1724 பேர் பட்டம் பெற்றனர்.

கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top