Close
செப்டம்பர் 20, 2024 5:53 காலை

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

இந்தியா

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை  (செப்.14) அதிகாலையில் கைது செய்து அந்நாட்டுக்கு கொண்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 163 விசைப் படகுகள் மூலமும் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 78 விசைப் படகுகள் மூலமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது, 32 நாட்டிக்கல் தொலைவில் கோட்டைப்பட்டினத் தைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான விசைப் படகில் என்.அருண் (36), ஜி.மருது (42), கே.சுந்தரம் (35), எஸ்.செல்வராஜ் (38) ஆகிய 4 மீனவர்களும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான விசைப் படகில் ஆர்.கேசவன் (32), ஆர்.குமார் (38), கே.முத்து (43), ஆர்.குணா (20), முருகேசன் (45) ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் சிறை பிடித்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தினரையும், சக மீனவர்களையும்  அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடரும் இலங்கை அரசின் அத்துமீறல்களை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில்  மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top