Close
செப்டம்பர் 19, 2024 11:02 மணி

மோசடிக்காரர்களுக்கு தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பு..!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (கோப்பு படம்)

குறுஞ்செய்தி (Message) மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இது செப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், மொபைல் போனுக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) கிடைப்பதில் தாமதம் ஆகும்.

நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இதில் ஒன்று, மக்களின் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்க்- ஒன்றை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகை மோசடிகள் நின்றபாடில்லை.

இந்நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்( TRAI) புது விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன்படி, எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புகள் ஓடிபி அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் அதன் தலைப்பு மற்றும் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

இத்தகைய குறுஞ்செய்திகளை ‘ஸ்கேன்’ செய்யவும், அதனை அணுகவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்களும் தடை செய்யப்படும். அது வங்கிகள் அனுப்பும் ஓடிபி ஆக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆக வேண்டும். இதனால், பயனர்களுக்கு ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனர்களுக்கு தாமதம் ஏற்படும். வங்கிகள் மற்றும் செயலி அடிப்படையில் சேவை வழங்குபவர்கள், ஆகியன எந்த எண்ணில் இருந்து ஓடிபி அனுப்பப்படும் என்பதை ஆக.,31க்குள் பதிவு செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் இந்த நடவடிக்கை மோசடி நடவடிக்கைகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என டிராய் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. செப்.,1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு டிராய் செவிசாய்க்கவில்லை.

மேலும், மொபைல்போன் மூலம் அழைப்பவரின் பெயரை, கேஒய்சி அடிப்படையில் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து டிராய் செயல்பட்டு வருகிறது.

இது அழைப்பவரின் உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், ட்ரூகாலர் செயலி போன்றவற்றை மக்கள் சார்ந்து இருப்பதை குறைக்க உதவும். அரசு அளித்த ஆவணங்களில் உள்ள பெயரை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடிவதால், மோசடிகளை தடுக்க முடியும் என டிராய் நம்புகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top