Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

ஈரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் உருவச்சிலை திறப்பு

ஈரோடு

ஈரோட்டில் நடந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியன் சிலை திறப்பு விழா

ஈரோடு ஈவிஎன் சாலையில், பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்படும், முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா, திண்டல் வேளாளர் கல்லூரியில் அண்மையில்  நடந்தது.

விழாவில்பங்கேற்று, சக்தி மசாலா நிறுவன தலைவர் பி.சி. துரைசாமி பேசியதாவது, ‘நம் நாட்டில் அன்று இருந்த 40 கோடி மக்களும், இன்றுள்ள 140 கோடி மக்களும், உணவில் தன்னிறைவு பெற பசுமைப்புரட்சி திட்டம் கொண்டு வந்தவர் சி.எஸ்’ என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து, தேசிய விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் பேசுகையில், ‘நாடு முழுவதும் படிப்படியாக இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தபோது, இந்தி திணிப்பால் தென் மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேருவுக்கு சி.எஸ். தெளிவுபடுத்தினார். அதன்காரணமாகவே, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை, அங்கு, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற முடிவை நேரு எடுத்தார்’ என்றார்.

காணொலிக் காட்சி மூலம் சி.சுப்பிரமணியம் சிலையைத் திறந்து வைத்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியாகி  லட்சுமிகாந்தன் பாரதி பேசும்போது, ‘கிராமராஜ்யம் வேண்டும் என்ற காந்தியக் கொள்கையை ஏற்றவர் சி.எஸ். அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கிராம ஆட்சி, கிராம மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் சி.எஸ். கொள்கையை நிறைவேற்ற முடியும் என்றார்.

விழாவில், சி.சுப்பிரமணியத்தின் வழித்தோன்றல்களைக் கௌரவித்து, பரதிய வித்யா பவன் தலைவர், பி.கே கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
நேர்மை, எளிமை, திறமை என மூன்றையும் ஒருங்கே கொண்ட சி.எஸ்., தமிழ்வழிக்கல்வியில், நகராட்சி பள்ளியில் பள்ளியில் படித்து நாட்டின் நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகளைப் பெற்றதோடு, பாரதரத்னா விருது பெற்றவர். சிறந்த நிர்வாகிகளை உருவாக்கும் திறன் கொண்டவர்.

நூறு ஆண்டுகளுக்குப்பின் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என கனவு கண்டதோடு, அதனை நனவாக்க செயல்திட்டங்க ளை சி.சுப்பிரமணியம் உருவாக்கினார். எந்த துறையில் நிர்வாகம் செய்தாலும், அதில் ஒரு முத்திரையை சி.எஸ்.பதித்துள்ளார். நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் அடையாளமாக சி.எஸ்.வாழ்ந்தார்.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய மூவருக்கும் தமிழக அரசின் சார்பில் பொள்ளாச்சியில் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தனது பசுமைப்புரட்சி சாதனைக்காக நோபல் பரிசு வழங்க அந்த குழுவினர் முன்வந்தபோது, அதனை மறுத்து, விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். அப்துல்கலாம், வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட குரியன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டவர்களை பொருத்தமான இடங்களில் அமரவைத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

அவர் வாழ்ந்த 90 ஆண்டுகளில் ஒரு நாள் கூட தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ வாழ்ந்ததில்லை. சமுதாய நலனுக்காக வாழ்ந்தார். நாம் சுயநலத்திற்காக எல்லாவற்றிலும் சமரசம் செய்ய தயாராகி விட்டோம். ஆனால், சி.எஸ். தன் வாழ்வில் தனக்காக எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.  மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும். ஆனால், எதில் மாறக்கூடாதோ அதில் பிடிவாதமாக இருக்க வேண்டும் என அந்த தலைமுறையினர் உணர்ந்து இருந்தனர். அடுத்த தேர்தல் பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்தனர்.
இன்றைய பள்ளி, கல்லூரிகளில் உண்மையான கல்வி கற்பிக்கப்படவில்லை. பணிவும், பக்குவமும் கொடுக்கும் கல்வி தேவை. தற்போதைய வாழ்க்கை முறை மிக அபாயகரமானதாக உள்ளது. இன்று சி.எஸ். போன்ற நேர்மையாளர்கள் தேவையாய் உள்ளனர்.

எல்லாம் கெட்டுவிட்டது, நாம் எதுவும் செய்ய முடியாது என்று கருதாமல், நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தினால், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகாத்மாவின் வழியில் இளம் சமுதாயம் சென்றால், இந்தியாவிற்கு மகத்தான எதிர்காலம் உள்ளது என்றார்.

முன்னதாக, மக்கள் சிந்தனைப்பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். பாரதி வித்யா பவன் தலைவர் அருணா ராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் நன்றி கூறினார்.

விழாவில் சக்தி மசாலா இயக்குநர் சாந்தி துரைசாமி, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top