Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

புதுகைத்தென்றல் இதழாசிரியருக்கு புதுக்கோட்டையில் முத்து விழா எடுத்த சான்றோர்கள்

புதுக்கோட்டை

புதுகை தென்றல் தருமராஜனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற இலக்கிய சான்றோர்கள்

புதுகைத் தென்றல்” மாத இதழின் ஆசிரியர் புதுகை மு. தருமராஜன் அவர்களின் -80 -ஆவது அகவை நிறைவு-முத்து விழாவை 15.7.2023, புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய, சமூக ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் சிறப்பாகக் கொண்டாடினர்.

விழாவுக்கு, பொன்மாரிக் கல்வி நிறுவனங்களின் தலைவர்
மருத்துவர் ச.ராம்தாஸ் தலைமை வகித்தார். கவிஞர் நிலவைப் பழனியப்பன் வாழ்த்துப்பா பாடினார்.வெங்க டேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.எம்.வி.கதிரேசன்  தொடக்கவுரை ஆற்றினார்.

உலகத் திருக்குறள் பேரவைத் துணைத் தலைவர் முனைவர் மு.பாலசுப்பிரமணியன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார், புலவர் துரை.மதிவாணன், வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி,
எஸ்.ஆரோக்கியசாமி, திருக்குறள் கழகத் தலைவர் க. இராமையா, எழுத்தாளர் அன்டனூர் சுரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அனைவரும் தங்கள் வாழ்த்துரையில் “புதுகைத் தென்றல்” மாத இதழ் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக, இடைநில்லாமல், வந்து கொண்டிருக்கிறது. தான் பிறந்த புதுக்கோட்டை மண்ணின் மீது உள்ள பற்றின் காரணமாக தான் நடத்தும் மாத இதழுக்கு “புதுகைத்தென்றல்” என்ற பெயர் சூட்டி இருக்கிறார். தன் துணைவியார் பேராசிரியர் பானுமதி தருமராஜன், சத்தியராம் ராமுக்கண்ணு உட்பட பலரை எழுத்தாளராக்கிய பெருமை புதுகை தருமராஜனுக்கு உண்டு.

அதேபோல் புதுகைத் தென்றலில் புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை தரும் மரபை தொடர்ந்து கடைபிடிக்கிறார். காமராஜரின் பேரில் உள்ள பற்றின் காரணமாக தன் வாழ்க்கையை நேர்மையாக அமைத்துக் கொண்டவர். பேராசிரியர் பானுமதி தருமராஜன் “வரலாறு படைத்த வைரமங்கையர்” கட்டுரைகள் மூலம் இந்தியச் சுதந்திரத்திற்கு, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட அறிந்த, அறியப்படாத பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இருவரும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.விழா நாயகர்கள் பானுமதி தருமராஜன், புதுகைத்தென்றல் மு.தருமராஜன் இருவரும் ஏற்புரை வழங்கினர்.

விழாவில், மேனாள் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.சேவியர்,
ந.புண்ணியமூர்த்தி, எஸ்.சுதந்திரராஜன், கோ.ச.தனபதி, கவி.முருகபாரதி, புதுகைப் புதல்வன், கவிஞர் பீர்முகமது உள்பட திரளானோர்  பங்கேற்று வாழ்த்தினர்.

முன்னதாக உலகத் திருக்குறள் பேரவை செயலாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சத்தியராம் ராமுக்கண்ணு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

விழா நிகழ்வுகளை உலகத் திருக்குறள் பேரவை துணைச் செயலர் கு.ம.திருப்பதி மற்றும் வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நிறைவாக உலகத் திருக்குறள் பேரவை துணைச் செயலர் ச.கண்ணன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top