அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..பாப்லோ நெரூடா…
சேகுவேராவை சுட்டுக் கொன்றபோது அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடாவினுடையது என்கிறார்கள். வெறும் கவிஞராக மட்டுமே அறியப்படாமல் கம்யூனிச சிந்தனையாளராகவும் அவர் இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. மக்களை ஒடுக்கிய அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்த அவரின் கவிதை கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக, பாட்டாளிகளை ஒன்று திரட்டியது.
பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறி, பெரும் புரட்சி நடந்து, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது என்பது வரலாறு.
கவிதைகள் வெறுமனே கவர்வதற்கு மட்டும் இல்லை கட்டுப்பாடுகளை உடைப்பதற்கும் தான் என பாடிய இவர் தனி மனித துதிபாடலை ஒழிக்க வந்திருக்கும் எனக்கு சிலை
அமைத்துவிடாதீர்கள் என்று தன்னைப் புகழ வந்தவர்களி டமிருந்து விலகி ஓடியவர்.
பாப்லோ மீது ஆணாதிக்கவாதி, சல்லாபகாரன் பெண்களின் மீதான தமது தீராத வேட்கையை வெளிப்படையாக முன்வைத்தவர் என்கிற விமர்சனம் உண்டு. பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான படைப்பாளிகள், புரட்சியாளர்கள் என அன்று தொடங்கிய பட்டியல் இன்றுவரை நீட்டுக்கொண்டே போவதை நாம் காண்கிறோம்.
படைப்பை விரும்பும் வாசகர்களுக்கு படைப்பாளியும் அவரின் சொந்த விருப்பு வெறுப்புகள் குறித்த ஆராய்ச்சி களும் அவசியமற்றவை என்பதை ஏற்பவன் நான். ஆகையால் பாப்லோ நெரூடா குறித்த அந்தரங்க விபரங்களை வலிந்து தவிர்த்துவிட்டு அவர் வரிகளை மட்டுமே வாசிக்கிறேன்.
நினைவிலிருந்து நீங்காமல் மனதிலிருந்து அகல மறுத்து அடம் பிடிக்கும் ஒரு சில வரிகளை இங்கு சொல்லியாக வேண்டும்..
துயர் மிகுந்த வரிகளை இன்றிரவு எழுதிடுவேன் நான் அவள் என்னிடம் இல்லையென்று எண்ண, அவளை இழந்தேன் என்று இதயத்தால் உணர…
இதுபோல ஓரிரவில் ஒய்யாரம் மிகுந்த இனியவளை இக்கரங்களில் இருத்தி இருந்தேன் நான்.. ஆன்மா அவளை இழந்து அலைகிறது.. இதுவே அவளுக்கான இறுதி இன்னல், இது அவளுக்காக நான் அளித்திடும் இறுதி இரு வரிகள்..
புத்தக சந்தையிலோ அல்லது புத்தக கடையிலோ கண்ணில் பட்டதுமே வாங்கி விடுங்கள்…
இங்கிலாந்திலிருந்து சங்கர்..




