Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறப்பு

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம், மருத்துவமனையில் சிக்கலான  அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறக்க காரணமான மருத்துவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

சென்னை அரசு ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவ மனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மணிமாலா (24) என்ற பெண்ணிற்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தாயையும், அவரது பெண் குழந்தையையும் வெற்றிகரமாக ஆபத்திலிருந்து மீட்டெடுத்தனர்.

திருவொற்றியூரை சேர்ந்த மணிமாலா என்ற பெண் பிறவியிலிருந்தே இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகி கர்ப்பமான  பிரசவத்திற்காக அரசு ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிமாலாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு செய்வதற்கு முடிவு செய்தனர். ஆனால் அவருக்கு இருதய நோய் இருந்ததால் ஸ்டான்லி இருதய சிகிச்சை பிரிவு பேராசிரியர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் முருகன் தலைமையில் சிறப்பு குழுவினர் மணிமாலாவை பரிசோதித்து அவருக்கு பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினர்.

இதனையடுத்து அவருக்கு சிசேரியன் முறை அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மணிமாலாவும்,  குழந்தையும் எவ்வித பிரச்னையுமின்றி ஆபத்திலிருந்து வெற்றிகரமாக மருத்துவர்கள் மீட்டெடுத்தனர்.

இந்தியாவிலேயே பேஸ் மேக்கர் பொருத்தி அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

;சென்னை

அமைச்சர் பாராட்டு:இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

அப்போது இச்சாதனையை படைத்த ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி இளங்கோ மற்றும் அனைத்து மருத்துவர் குழுவினரையும் அழைத்து பாராட்டினார். மேலும் ரூ. 17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள் கணினி மயமாக்கப்பட்ட ரேடியோகிராபி மேமோகிராமை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இங்கு நடைபெற்று வரும்  தமிழகத்தை சார்ந்த 40 மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிக்கான லட்சினையை அறிமுகம் செய்து போட்டிகளில்லி பங்கேற்று வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி கல்லூரி முதல்வர் டாக்டர் பி. பாலாஜி, துணை முதல்வர் ஜன்னத் சுகந்தா,  மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ் குமார், ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாந்தி இளங்கோ, உறைவிட மருத்துவ அதிகாரி வனிதா மலர் மற்றும் துறை தலைவர்கள்  கண்ணன்,  ஜஸ்வந்த்,  சந்திரசேகரன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வால் ஒரு பயனும் இல்லை என்பது உணரப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக ளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியது,

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கும் இல்லாத பல்வேறு அதிநவீன புதிய வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆர் எஸ் ஆர் எம்.  மருத்துவமனையும்,  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் தமிழக மருத்துவ உலகின் அடையாளங் களாக திகழ்கின்றன.

அடுத்த ஆண்டிற்குள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானம் மழைக்காலங்களிலும் பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடுகள் பெறப்பட்டு நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.

முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் முதுநிலை படிப்புகளில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதன் மூலம்  நீட்தேர்வால் ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மட்டுமே தகுதியை ஏற்படுத்த முடியும் என்று வாதிட்டு வந்தவர்கள இதற்காக என்ன சொல்லப் போகிறார் கள். இந்த முடிவு தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காகவும்,  வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பினை வழங்கும் முடிவாகவும் உள்ளது.

எனவே மத்திய அரசின் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வில் மீதான வழக்கில் எடுத்து வைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top