Close
செப்டம்பர் 20, 2024 1:46 காலை

அரசின் வரும் முன்காப்போம் முகாம் மூலமாக 9,002 பேர் பயனடைந்தனர்: அமைச்சர் ரகுபதி

திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ். ரகுபதி

திருமயத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை ஊராட்சி வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திங்கள்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற  இம்முகாமில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது;

கலைஞர் ஆட்சிக்காலத்தின்போது, வருமுன் காப்போம் திட்டமானது கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெற்று  நோயற்ற நல்வாழ்வு வாழ உறுதி செய்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம்கள் மீண்டும் புதுபொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு மருத்துவ வல்லுநர் குழுவினர் நேரில் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி, பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும். பல்வேறு விதமான நோய்களுக்கும், வருமுன் காப்போம் அணுகுமுறையினை மக்களிடையே ஏற்படுத்தி ஏழை எளிய மக்களுக்கும், இயலாத மக்களுக்கும் இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை சிகிச்சைகள் மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்பட்டது

இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் பொது மக்களுக்கு, குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காச நோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட வேண்டிய 39 மருத்துவ முகாம்களில் புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 13 முகாம்கள் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 7 முகாம்கள் என மொத்தம் 20 மருத்துவ முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் 11.03.2022 வரை நடைபெற்ற இம்முகாம்கள் மூலமாக 542 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும், 446 இ.சி.ஜி. பரிசோதனையும், 4,224 ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 1,162 நபர்களுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலமாக 9,002 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இம்மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று தங்களது ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழக சட்டத்துறை ரகுபதி பேசினார்.முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், குழிபிறை ஊராட்சிமன்றத் தலைவர் அழகப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top