Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வு வாரம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

உலக மனச்சிதைவு விழுப்புணர்வு வாரம்

ஒருங்கிணைந்த நவீன மருத்துவ சிகிச்சையின் மூலமாக மனச்சிதைவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

மனநல பிரச்னைகளை பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை புரிந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக மனச்சிதைவு நோய் விழிப்புணர்வுவாரம் 24.05.2022 முதல் 30.05.2022 வரை கடைபிடிக்கப்படுகிறது.

மனதை, மனதின் செயல்பாடுகள் மூலமே அறிய முடியும். நமது சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் பகுத்துணர்தல் முதலானவைகளின் இருப்பிடமாக மனம் விளங்குகிறது. மனநல பாதிப்பினால் ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி வெளிப்பாடு, நினைவாற்றல், கண்ணோட்டம், தீர்வு காணும் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதன் காரணமாக ஒருவருடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் மாறுபாடு ஏற்படலாம்.

மனச்சிதைவு நோயால் ஏற்படும் அறிகுறிகள், அனுபவங்கள் அனைத்தும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பொருத்த அளவில் உண்மையே, அவை கற்பனையல்ல என்பதை புரிந்து கொண்டு குடும்பத்தினர் உதவ முன்வர வேண்டும்.

மனநல பிரச்னைகள் பற்றிய அறியாமை மற்றும் தவறான எண்ணங்கள், நம்பிக்கைகள் காரணமாக மருத்துவச் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்த்து, ஒருவருக்கு மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அவரை தயங்காமல் மனநல மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த நவீன மருத்துவ சிகிச்சையின் மூலமாக மனச்சிதைவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக மனநலம், மனநல பிரச்சனைகள் மற்றும் மனநல மருத்துவ சேவைகள் பற்றிய தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

ஆரம்ப கட்டத்திலேயே மனநோயை கண்டறிதல், மனநோய்க் கான அவசர சிகிச்சை, தொடர் சிகிச்சை, உயர் சிகிச்சைக்கு பரிந்துரை முதலான சேவைகள் வழங்கப்படுகிறது. வாரந் தோறும் மனநல வியாழன் என்ற பெயரில் மனநல விழிப்பு ணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு சமூக வளைதளங்கள் மூலமாக பகிரப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனை கள் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கென அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன் உணவு, உடை முதலான தன்தேவை பொருட்கள் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்தறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி உள்ளாட்சி மருத்துவத்துறை உட்பட இதர அரசு துறையினர் உதவியுடன் ஆதரவற்ற மனநோயாளிகளை பாதுகாப்பாக மீட்பதுடன், குணமடைந்த பின்பு அவர்களின் குடும்பத்தினரை கண்டறிந்து குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைத்தல் முதலான ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது.

கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. எனவே மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்; சிகிச்சை பெற அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி பயனடையலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை 94860 67686 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top