Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவர்

புதுக்கோட்டை

சீனாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள்ள மாணவரை மீட்டுத்தரக்கோரி மனு

 சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவரை மீட்கக்கோரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மருத்துவ படிப்பு சீனாவில் புதிய வகை கொரோனா (பி.எப்.7) வேகமாக பரவி வருகிற நிலையில் அங்கு உயிருக்காக போராடி வரும் புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவ மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அவரது  பெற்றோர் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில்  மனு அளித்தனர்.                                                                                                                                                                             மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம் : புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவர் காலணி விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சைனம்பூராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சேக்அப்துல்லா ( 22). இவர் சீனாவில் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பை 5 ஆண்டு படித்து முடித்துள்ளார்.

 இதற்கிடையே சொந்த ஊருக்கு வந்த அவர்,  தற்போது மருத்துவ பயிற்சிக்காக கடந்த 11- ஆம் தேதி மீண்டும் சீனா புறப்பட்டு சென்றார். அங்கு கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு சென்றார்.

இந்நிலையில் அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர் பாக பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோருக்கு கடந்த 24- ஆம் தேதி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் சீனாவில் தனது மகன் உயிருக்கு போராடி வருவதால், அவருக்கு உயர்தர சிகிச்சை அளித்து, நல்ல உடல் நலத்துடன்  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு மத்திய, மாநில அரசுகள்  துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சையது அபுல்ஹாசன் சாதலி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் கண்ணீருடன்  மனு அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

சையதுஅபுல்ஹாசன் சாதலி கூறுகையில், ‘எங்களது மகன் சீனாவில் கடந்த 2017-ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்தார். இதனிடேய  கொரோனா கால கட்டத்தில் சொந்த ஊருக்கு  திரும்பி வந்து பின்பு, ஆன்லைனில் படித்தார். படிப்பு முடிந்த நிலையில் மருத்துவ பயிற்சி மேற்கொள்வதற்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு விடுத்தனர்.

அதனால்தான் அவர் சீனா புறப்பட்டு சென்றார். அவருடன் புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் மற்றும் திருச்சி, சென்னையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றனர்.

மற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர். எங்களது மகனுக்கு மட்டும் உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தனர். ஆனால் புதிய வகை கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கவில்லை.

அதனால் எங்களது மகனுக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. அவரிடம் நாங்கள் செல்போனில் பேசவில்லை. மயக்க நிலையில் சிகிச்சையில் இருப்பதாக மட்டும் தகவல் தெரிவித்தனர். அவரை நல்ல முறையில் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top