Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

பாரசீகத்திலிருந்த வந்த பரோட்டா தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத உணவு… ஆனால்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பரோட்டா- தவிர்க்க முடியாத உணவு.. ஆனால்

பரோட்டா – தென்னிந்தியாவில் பிரபலமான, தவிர்க்க முடியாத உணவு. சிறிய உணவகம் முதல் நட்சத்திர உணவகம் வரை, இந்த பரோட்டாவானது அந்தந்த உணவகங்களின் சமையல் நிபுணர்கள் கை வண்ணத்தில், தனிச் சிறப்புடன், தனிச் சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதி சார்ந்த பக்குவத்துடன், இந்த பதார்த்தம் தனக்கே உரிய பிரபலத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

குறைந்தது 15 வகையான பரோட்டாக்கள் இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார்கள். மைதா அல்லது கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் பரோட்டாவானது இந்திய வீடுகளில், உணவகங்களில் பிரதானமாக உள்ளன.

அவை வெறுமனே கடாயில் சுட்டும், எண்ணையில் பொரித்தும், காய் அல்லது கறி வகைகளை கொண்டு அடைத்தும், எண்ணெய் அல்லாத தந்தூரி ரொட்டியாகவும் பலவாறு சமைத்து பரிமாறப்பட்டாலும், கொத்து ரொட்டிக்கு இருக்கிற கெத்து எப்போதும் தனி தான்.

இது விலை குறைவாக சாமானிய மக்களின் பசி தீர்க்கும் உணவாக இருப்பதால். இரண்டு மூன்று பரோட்டா சாப்பிட்டாலே பசி குறைந்து விடும். மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்திருக்கிறது.

மைதா மாவை வேகவைத்து, உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைக ளுக்கும், உணவாக வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்க தேவையில்லை.

இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிட தொடங்கினர் என்பதே சுருக்கமான வரலாறு.

பரோட்டா மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமக்கு கேடு தரும் என்பதை அறிந்தும் நாம் பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவை அனைத்தும் நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஒன்றிணைந்து விட்டது. உதாரணமாக, நெகிழி பயன்பாட்டை எடுத்துக் கொள்வோம். அது கெடுதல் தரும் என அறிந்தும் அதை நம்மால் முற்றிலும் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம்.

இந்தப் பரோட்டா தயாரிக்க பயன்படுவது ‘வெள்ளை கோதுமை’ ஆகும். கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டதல்ல. மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் மாவு இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது மைதா.

இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக்கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் தவிர்த்து நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாவதில்லை.

இன்றைக்கு பெரும்பாலான உணவுகளில் மைதாவின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. வியாபாரத்தின் பொருட்டு மங்கிய நிறத்தை, வெண்மையாக்க ரசாயனம் கொண்டு ‘பிளீச்’ செய்யப்பட்டு, இறுதியில் வெள்ளை நிறத்தில் வெள்ளந்தியாக காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

ஆனால், தென்னிந்திய உணவு வகைகளில் பிரதானமாக இடம் பிடித்திருக்கும் பரோட்டாவை முற்றிலும் உண்ணாமல் இருக்க முடியாது, வேண்டுமானால் வழக்கமாகவும், கூடுதலாகவும் உட்கொள்ளாமல் இருப்பது நலம் பயக்கலாம்.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top