Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

இங்கிலாந்தில் இயற்கை விவசாயம் மூலம் காய்கனி சாகுபடி..

அயலகத்தமிழர்கள்

இங்கிலாந்தில் இயற்கை விவசாயம்

வீட்டில் விதைத்த தக்காளி மற்றும் உருளைக் கிழங்கை நேற்று அறுவடை செய்தேன். எதிர்பார்த்ததை விட விளைச்சல் இந்த முறை பரவாயில்லை. கடையில் வாங்கிய உரத்துடன் தோட்டத்து மண்ணை கலந்து தான் பயிரிடப்பட்டது. தண்ணீரை தவிர்த்து எந்த செயற்கை உரமும் இரசாயனப் பூச்சி கொல்லிகளும் உபயோகப்படுத்தப்படவில்லை.

பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், நீம் அஸ்திரம், பீரம்மாஸ்திரம், அக்னி அஸ்திரம், சுக்கு அஸ்திரம், மூடாக்கு, மண்புழு உரம், பஞ்சக்காவியம், கசக்காவியம், மோர் கரைசல், முட்டைக்கரைசல், நெல்லிக்கரைசல்…

இவையெல்லாம் மந்திரத்தின் போது உச்சரிக்கப்படும் சொற்கள் அல்ல. இவை அனைத்தும் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதை நேர்த்திகள், வளர்ச்சியூக்கிகள், நுண்ணுயிர் பெருக்கிகளின் பெயர்கள். இவை இயற்கை விவசாயத்தில் முக்கியமானவை.

இந்த வழிமுறையும் செய்முறையும் பெரியளவில் வணிக நோக்கில் செய்யும் விவசாயத்தில் சாத்தியமா?!அதிக விளைச்சலை விட உணவின் தரம் மிகவும் முக்கியமானது. இதுவே இயற்கை வேளாண்மைக்கான அடிப்படை. விளைச்சல் குறைவு.அதனால் லாபம் குறைவு

இயற்கைவேளாண்மை பற்றி கூறுகையில் சாத்தியம் இல்லை என கூறமாட்டேன். ஆனால் அதன் வழியாக இலாபம் பார்க்க எண்ணினால் அது இயலாத காரியம். நாம் பூச்சி மருந்து தெளிக்காத சத்தான காய்கறி தேவையெனில் நமக்கு நாமே வீட்டில் விளைவித்து உண்ண வேண்டியது தான். இது அனைவராலும் செயல்படுத்த முடியாத ஒன்று.

விவசாயம் என்பது கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிற ஒன்று. இன்று வரை பூமித்தாய் மனிதனுக்கு அள்ளி வழங்கும் செல்வங்கள் கணக்கற்றவை. அந்த செல்வங்கள் பூமித்தாயை ஏழையாக்கி விடவில்லை. ஆனால் அந்த பூமித்தாயின் இயற்கை சத்துக்களை உறிஞ்ச ஆரம்பித்த நாம் தான் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் அவளை மிகவும் ஏழை ஆக்கிவிட்டோம்.

ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த இஸ்ரேல் நாடு தான், இன்று உலகத்திலேயே அதிநவீன விவசாயம் செய்யும் நாடு அவ்வளவு ஏன் தமிழ்நாட்டின் வேளாண் துறையே அந்த நாட்டு வல்லுநர்களை வரவழைத்து தான் பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்களின் விடாமுயற்சியால், தொழில்நுட்ப அறிவால் தான் இன்று உலகின் முன்னணி விவசாய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை வாங்க முடிந்தது, நாமும் யானைக் கட்டி போர் அடித்தவர்கள் தான், ஆனால் இன்று நிலைமை வேறு.

விவசாயத்தை காப்பாற்ற துல்லிய வேளாண்மையும்,தொழில் நுட்பத்துகேற்ப நம்மை தகவமைத்து கொள்ளுதல் அவசியம். மேலும் விவசாயிகளுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். தகவல்களை விவசாயிகளுக்கு ஏற்றதுபோல் கூற ஒரு நல்ல தொழில்நுட்பம் அவசியம். அது விவசாயிகளும் உபயோகப்படுவது போல் இருக்க வேண்டும்.

எல்லாமே காலம் தொட்டுவிடும் தூரம்தான்…கையெட்டும் தூரம்தான் ! அப்போது …காலம் மாறும்.இரசாயனமற்ற இயற்கை விவசாயத்திற்கு குறைந்த பட்சம் 50 விழுக்காடாவது திரும்புவோம். காத்திருப்போம்.!

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top