Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

கீழ்பவானி கால்வாயை புனரமைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் வலியுறுத்தல்

ஈரோடு

கீழ்பவானி கால்வாயை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன்

கீழ்பவானி பாசன கால்வாயை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் வலியுறுத்தினார்.

பெருந்துறை அருகே வாய்க்காலில் இரண்டு இடங்களில் கடந்த சனிக்கிழமை அன்று உடைப்பு ஏற்பட்டது . வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கால்வாய் சீரமைக்கும் திட்டத்தை துவக்கியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆதரித்தார். ஆனால் கொரோனா காரணமாக பணிகள் நடைபெறவில்லை.

கடந்த ஆட்சியிலேயே மேட்டூர் வலது கரை இடதுகரை கால்வாய் கரைகள்கான்கிரீட் போடப்பட்டு சீரமைக்கப் பட்டுள்ளதால்  தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு நீர் கிடைக்கிறது.

எனவே இங்குள்ள விவசாயிகள் அங்கு சென்று பார்த்து வர அப்போதே ஆலோசனை கூறினோம். தற்போது ஒரு தரப்பு விவசாயிகள் திட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்களுடன் சுமூகமாக பேசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்தக் கால்வாய் 67 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டதால்   புனரமைப்பு அவசியம். வாய்க்கால் உடைப்பால் சேதம் அடைந்தது பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நஷ்டத்தை அரசு வழங்க வேண்டும்.

இதே போன்ற அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் அதைப் பகுதி பகுதியாக 2021 -க்குள் நிறைவேற்ற திட்டமிட்டோம். ஆனால் கொரோனா போன்ற பிரச்னைகளால் திட்டம் பாதிக்கப்பட்டது.

எனினும் 90 சதவீத பணிகள் நிறைவு அடைந்து விட்டன. இந்த அரசு அந்த திட்டத்தையும் நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை.  அத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை எதுவும் இல்லை. விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற முழு ஆதரவு அளிக்கின்றனர்.

இதே போன்று காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதுவும் சரிவர நிறைவேற்றப் படவில்லை. கடந்த ஆட்சியில் தோப்பூர் கணவாய் பகுதியில் நான்கு வழி சாலையாக மாற்ற நிதி ஒதுக்கி டெண்டர் பெறப்பட்டது.

ஆனால் அந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க சுமார் 6000 கோடியில் திட்டம் தீட்டி பணிகள் நடந்தன. அந்த பணிகள் தான் இப்போது முடிவடைந்துள்ளது.

அதனால்தான் மழையில் தண்ணீர் அங்கு தேங்க வில்லை. அது மட்டுமல்ல சுமார் 16 ஆயிரம் கோடிக்கு பல திட்டங்களை நாங்கள் உருவாக்கினோம். அதன் திறப்பு விழாவை தான் தற்போது திமுகவினர் செய்து வருகின்றனர்.

எனது தொகுதியில் சாலை மேம்பாடு உட்பட பல்வேறு பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன .ஆனால் தற்போது அதற்கு நிதி ஒதுக்காமல் உள்ளனர். எங்களது ஆட்சியில் வர்தா, நிவர் போன்ற பெரும் புயல்கள் தமிழகத்தை தாக்கின.

அதற்கான நிவாரண பணிகளை நாங்கள் சிறப்பாக செய்தோம்.  தற்போது மாண்டஸ்புயல் பெரிய சேதத்தை உருவாக்கவில்லை. ஆனால் அதை ஏதோ மிகச் சிறப்பாக கையாண்டதாக முதல்வர் கூறுகிறார்.

எங்களைப் பொறுத்தவரை தமிழக மக்களை பாதிக்கும் புயல் எதுவும் வரக்கூடாது என்பதுதான்.  ஆனால் இந்த ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி, செல்வராஜ், விஜயன் வைகை தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top