Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ சின்னத்துரை வலியுறுத்தல்

சென்னை

கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் எம். சின்னதுரை பேசியதாவது:
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 1000 என்கிற மகத்தான திட்டம் தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மிக சிறந்த இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஆனாலும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் 1.02 கோடி உள்ளது. அரிசி வழங்குவதற்கு ஒன்றிய அரசு மானியங்களை ரத்து செய்துள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதோ என்கிற அச்சம் பெண்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. ஆகவே, ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

காலை உணவுத் திட்டம்
ஒன்றிய அரசு நிதிகளையும், அதிகாரங்களையும் மையப் படுத்தி குவிமையமாக்கிக் கொண்டு மாநிலங்களுக்கு சேர வேண்டிய பகிர்வினை குறைத்தும், மறுத்தும் வரும் நிலை யில், தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள் ளதும் புதிய திட்டங்களுக்கும் – வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படாத முறையில் செயல்படுவோம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் சிறப்பான திட்டமாகும். அதனை அரசுத்துறை மூலம் நிறைவேற்ற வேண்டும்.
அதிக நிதி ஒதுக்கீடு
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையின் கீழ் மாற்றுதல், ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள், மகளிருக்கு தனி ஸ்டார்ட் அப் தொழில்கள், பட்டியலின தொழில் முனை வ ரை ஊக்கப்படுத்துதல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவச திக்கான ஒதுக்கீடு, சுகாதாரத்துறை ஆகியவற்றிற்கு அதிக மாக நிதி ஒதுக்கீடுகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஒன்றிய அரசின் கொள்கை களால் மிகவும் நலிவடைந்துள்ள சூழலில் அதற்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்க தக்கது. குறிப்பாக தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகாமில் வசிப்போர் நலன்
தமிழ்நாட்டு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்க ளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு வரவேற்கதக் கதாகும். அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், உதவித்தொகையை அதிகரிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
கவலையளிக்கும் நிதி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதே சமயம் இத்துறைக்கான ஒதுக்கீடு 16 விழுக்காடு குறைக்கப் பட்டுள்ளது. ஆதி திராவிட நலப் பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டதை கணக்கில் எடுத்தாலும் கூட, இந்த குறைவு கவலையளிக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப் படுகிறது. அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மூவாலூர் திட்டம் தேவை
பல ஏழைக் குடும்பங்கள் பயனடைந்து வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
நவீனம் என்கிற பெயரால் வேலை இழப்பு கூடாது
புதை சாக்கடைக் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அரசே நவீன இயந்திரங்களை வாங்குவதும் அவற்றை செயல்படுத்த வேண்டும். நவீனம் என்கிற பெயரில் வேலை இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. சாதி வித்தியாசம் இல்லாமல் ஊழியர்களை பயிற்றுவிக்க வேண்டுகிறேன்.
வேளாண் நிதிநிலை
சிறு தானியங்கள் உற்பத்தி – கொள்முதல் – விற்பனை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றிட அறிவிப்பு வெளியீடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் பொது விநியோக முறைக்கு ஆபத்து அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பொது விநியோக கடைகளில் கம்பு – கேழ்வரகு வழங்குவது பாராட்டத்தக்கதாகும். பொது விநியோக முறையை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.
கிராமம்தோறும் முருங்கை சாகுபடி
இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த நம்மவாழ்வார் விருது வழங்குவது பாராட்டு தக்கதது. முருங்கை சாகுபடி, மதுரை மல்லிக்கான சந்தை, வன விலங்குகளால் விவசாய பயிர்கள் அழிக்கப்படுவதற்கு நிவாரணம் போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. காட்டு பன்றிகள் மற்றும் மயில் தொல்லைகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் முருங்கை சாகுபடிக்கு திட்டமிட வேண்டும்.
ஊக்கத் தொகையை அதிகப்படுத்த வேண்டும்
கரும்புக்கும், நெல்லுக்கும் ஊக்கத் தொகை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றாலும் இடுப்பொருட்கள் விலை, உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்துள்ளதால் ஊக்கத் தொகையையும் கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிக ளின் நீண்ட நாள் கோரிக்கையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 வழங்க வேண்டும்.
அரசு காப்பீட்டு நிறுவனம்
இயற்கை இடர்பாடுகளால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப் படும் போது காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. வரும் ஆண்டு ரூ. 2337 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை. எனவே, அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும்.
விவசாய கூலிகளுக்கு குறைந்தபட்ச கூலி சட்டம்
தமிழ்நாட்டில் 2018 இல் தினக்கூலி ரூ. 190 என்ற அறிவிப்புதான் தற்போதும் இவைதான் நடைமுறையில் உள்ளது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விவசாய கூலித் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். தினக்கூலியாக குறைந்தபட்சம் ரூ. 600 அறிவிக்க வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடமாக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதியை பெருமளவிற்கு வெட்டிக் குறைத்துள்ளது.

இத்திட்டத்தை நம்பி தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் பணிபுரிகின்றனர். இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க 150 நாள் வேலையும், ரூ. 600 கூலியும் வழங்க வேண்டும். தமிழ்நட்டில் விவாசாய தொழிலாளர்ககளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.

நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் 2021-2022 அறிவிப்பு செய்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப் பட்டது. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பல தரப்பினரின் பாராட்டைப் பெற்ற நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வேளாண் மண்டலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் வேளாண் சார்ந்த புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க வேண்டும். வேளாண் மண்டலத்தை பாதுகாக்க வேண்டும். இந்த ஆண்டே வேளாண் தொழில் பெருந்தட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் இத்திட்டம் துவக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து வந்து விட்டோம். உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவும், தென் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை திமுக தலைமையிலான அரசு தன் நிறைவேற்று என்று புதுகோட்டை மாவட்ட மக்கள் நம்பிகையுடன் உள்ளனர். எனவே. இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறேன்.

காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிக்கு அரசு ரூ. 90 கோடி ஒதுக்கியுள்ளது போதுமானதாக இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கடைமடை விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தொழிலாளர்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில் பெண்களுக்கு உரிமைத் தொகை அறிவிப்பு செய்யயப்பட்டதால் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கான பழைய பென்சன் திட்டத்தையும் அமல்படுத்தினால் மிகப்பெரிய செல்வாக்கை பெறமுடியும்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளிகளுக்கு 90 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.சத்துணவு – அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத் தை – அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கான ஊதியத்தை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு சின்னதுரை எம்எல்ஏ பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top