Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

ஜி.கே. வாசனை அவதூறாகப் பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு தமாகா இளைஞரணி கடும் கண்டனம்

தமிழ்நாடு

தமாகா மாநில இளைஞரணித்தலைவர் எம். யுவராஜா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை அவதூறாகப் பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு தமாகா இளைஞரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் கடந்த கால அரசியல் வரலாறு தடுமாற்றம் நிரம்பிய தடைபட்ட அரசியல் பயணம். எங்கும் எதிலும் எப்போதும் நிலைத்ததும் இல்லை நின்று  பேசியதும் இல்லை. தனக்கு வாயில் வந்ததை பேசி விட்டு தவறாக பேசி விட்டோம் என்று மன்னிப்பு கேட்கும் பழக்கம் அவருக்கு அரசியல் வழக்கமாக உள்ளது.

நீங்கள் 1988 -ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு  ஆதரவு தந்து காங்கிரஸ் வேட்பாளரை வென்று சட்டமன்றத்தில் நுழைந்தீர்கள்.  தங்களின் நடவடிக்கையால் அப்போதைய சபாநாயகர்  பி.ஹெச்.பாண்டியனால் சபையை விட்டே ஓரம் கட்டப்பட்டீர்கள்.  பிறகு சிவாஜி அவர்கள் உங்களால்  அதல பாதாளத்திற்கு சென்றதை நாடே அறியும்.

2000ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமை தங்களை அங்கீகரிக்காத காலத்தில் மறைந்த சுலோச்சனா சம்பத் அவர்களுடைய வேண்டுகோளு க்கிணங்க தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தங்களை நியமிக்க சோனியா அவர்களிடம் பேசி பெற்றுத்தந்த தலைவர் மூப்பனார் என்பதை நீங்களும் மறந்து விட்டீர்கள்! உங்கள் நாக்கும் மறந்துவிட்டது.

2001ஆம் ஆண்டு நடந்த  சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியதை மறந்து விட்டு பேசுவதா? 2004 ஆம் ஆண்டு நீங்கள் போட்டியிட்டபோது தலைவர்  வாசன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு உங்களுக்காக வாக்கு சேகரித்த போது கை கூப்பி தலைவர்  வாசன் அவர்களின் பின்புறம் நின்றதை மறந்து விட்டு பேசுவதா?.

2009 -இல் இருந்து 2014 உங்களுடைய தோல்விக்கு பிறகு மத்திய அமைச்சராக இருந்த  ஜி.கே வாசன்  தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் போது தங்களையும் உடன் அழைத்து சென்று தங்களை காரின் முன் இருக்கையில் அமரவைத்து அழைத்து சென்றதையும், நிகழ்ச்சியில் தலைவருடன் தாங்கள் பங்கேற்கும் போது பத்திரிக்கையாளர்களே தங்களுடைய பெயரை போடத் தயங்கிய தருணத்தில், தங்களையும் முன்னிறுத்தி அழகு பார்த்த பெருமை தலைவர் வாசன் என்பதை மறந்துவிட்டீர்களா?.

2014 ஆம் ஆண்டில் ஜி.கே வாசன் அவர்களது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போதே எங்கு நீங்கள் தமிழ் மாநில காங்கிரஸில் ஐக்கியமாகி விடுவீர்களோ! என்று காங்கிரஸ் தலைவர் பதவியை அம்மையார் சோனியா காந்தி கொடுத்தபோது அதை எங்கள் தலைவர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்ததை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்.

நீங்கள் பங்கேற்ற அனைத்து தேர்தல்களிலும் தலைவர்  வாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து உங்கள் வெற்றிக்கு வழி வகுத்ததை இன்று நினைவுகூற விரும்புகிறேன். 2017ல் உடல் நிலையை காரணம் காட்டி ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாகிய உங்களை எப்படி தலைவர் பதவியை விட்டு நீக்கினார்கள் என்பது  உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.

ஆனால் இன்று தமாகா  தலைவர்  ஜிகே வாசன் உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நிகராக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதன் வெளிப்பாடுதான் உங்களை  இப்படி உளர வைக்கிறது. தங்கள் தொகுதிக்கு அருகிலேயே  பல்லாயிரம் பேர் கூடிய பெருந்தலைவர் காமராஜர்  பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தை பார்க்காத நீங்கள் எப்படி தொகுதியில் மக்கள் படும் துயரங்களை பார்க்க முடியும்.

நாட்டு  மக்களுக்கு தாங்கள் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். தங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு இனியாவது இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களை செய்யாமல் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். நிலை தடுமாறி செய்தியாளர்களிடம் பேசிய காரணத்தால் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலே உளறி கொட்டி இருக்கிறீர்கள்.

இந்த உளறலே கடைசியாக இருக்கட்டும். இனியும் தமாகா  தலைவர் வாசனைப் பற்றி பேசுவதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இனியாவது தங்கள் வயதிற்கேற்ப  மரியாதையோடும், பண்போடும் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டு மென  த.மா.கா இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார் யுவராஜா. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top