Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்தியஅரசு ஆதரவளிக்கக்கூடாது: சமவெளி விவசாயிகள் சங்கம் எச்சரிக்கைப்பாடு

சமவெளி

சமவெளி விவசாயிகள் இயக்கம்

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேக்கே தாட்டு அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமவெளி விவசாயிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன்  வெளியிட்ட அறிக்கை:  மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நிலைப்பாட்டையும், கர்நாடகா சட்டமன்ற நடவடிக்கையையும் கண்டிக்கிறோம்.

மேக்கேதாட்டு
சு.பழனி ராஜன் ஒருங்கிணைப்பாளர் சமவெளி விவசாயிகள் இயக்கம்

நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணி பொதுக்கூட்டத் தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் மேக்கேதாட்டுவில் நிச்சயம் அணை கட்டுவோம் என்று மற்ற கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களைப் போலவே பேசியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக. ஒரு அகில இந்திய காங்கிரஸ் தலைவர், காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக இப்படிப் பேசி இருப்பதை எங்கள் சமவெளி விவசாயிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உடனே அறிக்கை வெளியிடுவதுடன், ராகுல் காந்தியிடமும் புகார் அளித்து, சுர்ஜிவாலாவை இதற்காக வருத்தம் தெரிவிக்க வலியுறுத்த வேண்டும்.

கர்நாடகா அரசும் சட்டமன்றத்தில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்காக ரூ. 1000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. உச்சதீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சில மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்டமுடியாது.

அப்படி இருந்தும் சட்டமன்றத்தில் மேகேதாட்டு அணைக்காக நிதி ஒதுக்குவது என்பது அடாவடித்தனமும் , நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.இது குறித்து தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கவேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழ்நாட்டின் சம்மதமில்லாமல் மேகே தாட்டுவில் அணைகட்ட முடியாது.அப்படி ஏதாவது நடக்கும் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணைபோனால் அது இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கே உலைவைக்கும் செயலாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம் என்று அந்த  அறிக்கையில் சு.பழனிராஜன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top