Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது: ஈவிகேஎஸ். இளங்கோவன்

ஈரோடு

திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன்

திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன்.

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.

இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிக பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாய கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன்.

திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிக பெரிய வெற்றியை பெறுவோம்.

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, அண்ணாமலை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர் நான் அவரை விட சின்ன மனிதர் அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து கேட்டதற்கு, அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top