Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக மாவட்ட தேர்தல் நிர்வாகம் முன்னேற்பாடுகளை  மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. 8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 10-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் முன்னாள் மத்திய ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட உடனே வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றும் வாக்குச்சாவடி முன்பு ஒட்டும் வேட்பாளர்கள் போட்டோ முகவரி மற்றும் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் எ வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வேட்பாளர்கள் 77 மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 78 பெயர், சின்னங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் வி.வி.பேட் எந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:

 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) பிப்.18 காலையில் தொடங்கியது. இந்த பணி 3 நாட்கள் நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

பின்னர் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான 26-ம் தேதி காலை 11 மணி முதல் அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். பின்னர் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் வி.வி.பேட் எந்திரத்தையும் பொருத்தி ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வைப்பார்கள்.

பின்னர் ஓட்டுப்பதிவு நாளான 27-ம் தேதி காலை 6 மணிக்கு அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பின்னர் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

கிழக்குத் தொகுதியில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வெப் கேமரா பொருத்தப் பட்டு வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படும். மேலும் அங்கு துணை ராணுவம் பாதுகாப்பும் போடப்படும். இது தவிர மற்ற வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ எடுக்கப்படும்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பார்கள். இதுதவிர மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top