Close
ஜூலை 7, 2024 10:00 காலை

ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி

ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா்.

ஆரணி தனியாா் மண்டபத்தில் மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் கு.பாக்கியலட்சுமியின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் தொகுதி தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை துணைச் செயலா் கணேஷ் வேட்பாளரை அறிமுகம் செய்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி பேசியதாவது:
மருத்துவரான நான் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறேன்.

மக்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன் தேர்தலில் சின்னம் தங்களுக்கு முக்கியமில்லை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்,

ஆரணியில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் பட்டு பூங்கா அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வசூரில் உள்ள விதை நெல் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்தி நெல்லை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும். செஞ்சிக்கோட்டையை சுற்றுலா தலமாக்கி வெளி மாநில மக்கள், வெளிநாடு மக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்படும்.

போளூரை அடுத்த முடையூா் கிராமத்தில் கற்சிற்பக் கலை தொழில் செய்து வரும் சிற்பிகள், தொழிலாளா்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி செய்யப்படும். செய்யாறு பகுதியில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. அதனால் ஆதாயம் கிடைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மயிலம் கிராமத்தைப் பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரணமல்லூா் பகுதியில் கல்குவாரிகள் அதிகளவில் உள்ளன. அரசால் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழம் தோண்டி கனிம வளங்களை சுரண்டியுள்ளனா். இது சரி செய்யப்படும். செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செய்யாற்றில் கலக்கப்படுகிறது.

இதனை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும், சிப்காட் விரிவாக்கத்துக்கு கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஆரணி பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. மணல் கொள்ளையை தடுத்து, கனிம வளங்கள் பாதுகாக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவா் பாண்டியன், போளூா் தொகுதி தலைவா் பிரகாஷ், ஆரணி தொகுதி செயலா் சுமன், நகரச் செயலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

31 வயதாகும் வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி திருப்பத்தூா், தனது சொந்த ஊரான அண்ணா நகரில் இளநிலை மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top